
இரா.கோ யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மேதகு 2”. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேதகு படத்தின் முதல் பாகம் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படக்குழு அதன் இரண்டாம் பாகத்தையும் வெளியிடுகிறது.
தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும், பல ஆதரவுகள் உலகெங்கும் வந்த வண்ணம் இருக்கிறது.
தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் கெளரி சங்கர் நடித்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நாசர் நடித்திருக்கிறார்.
கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது கல்லூரி விழா ஒன்றிற்காக நாசரை சந்திக்கச் செல்லும் போது, அவர் கூறும் வரலாற்று காவியம் தான் இந்த “மேதகு 2”.

முதல் பாகத்தில் சிலவற்றை கூறியபோதும், அதன் தொடர்ச்சியாக மேதகு 2 உருவாகியுள்ளது. சில கதாபாத்திரங்களை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
இலங்கை போரைப் பற்றியும் பிரபாகரனின் வாழ்வியலைப் பற்றியும் பல படங்கள் இதற்கு முன் வந்து சென்றாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது. கெளரி சங்கரின் முக அமைப்பு சாயலாக பிரபாகரன் போன்று காட்சியளித்திருக்கிறார்.
மக்களுக்காக களம் இறங்கும் பிரபாகரனின் ஆரம்ப காலக்கட்டத்தை இந்த “மேதகு 2” பறைசாற்றியிருக்கிறது.
எவ்வித சமரசமும் இல்லாமல், கட்சித் தலைவர்கள் பிரபாகரனை பற்றி நினைத்திருந்தது, அவர்கள் பேசியதை வெளிப்படையாக கூறி நிஜத்தின் உண்மையை காட்சிப்படுத்தி படக்குழுவிற்கு பெரும் பாராட்டுகள் கொடுக்கலாம்.
நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கும் காட்சிகளை சற்று தவிர்த்திருக்கலாம். வலி ஒரு போது அழியாது, அதற்காக அந்த வலியை கண்முன்னே இப்படியாக காட்சிப்படுத்த வேண்டுமா.?
இசையமைப்பாளர் பிரவின் குமாரின் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுவாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், என அவரவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.
பல படங்களில் கூறப்படாத சில அரசியல் நிகழ்வுகளையும், அரசியல்வாதிகளின் எண்ணப் போக்கையும் இப்படத்தில் கூறியிருக்கிறார்கள் அதற்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது.
தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும் என்று படக்குழு கூறியுள்ளது.





