
2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் பிங்க்.
இதை தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் அஜித் நடிக்க இப்படத்தை ஹச் வினோத் இயக்கியிருக்கிறார்.
கதைப்படி, ஷ்ரதா ஸ்ரீநாத், அபி மற்றும் ஆண்ட்ரியா இவர்கள் மூவரும் நண்பர்கள். மார்டனாக வளர்ந்து வருபவர்கள். ஒருநாள் இரவு இவர்கள் தனியார் விடுதியில் நடக்கும் பார்ட்டிக்கு சென்றிருக்கும் போது, ஷ்ரதா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார் லோக்கல் எம் எல் ஏ மருமகனாக வரும் ஆதிக்.
அப்போது, கையில் கிடைத்த பாட்டிலைக் கொண்டு ஆதிக்கை தாக்குகிறார் ஷ்ரதா. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் ஆதிக்.
தனது அதிகார பலத்தால், ஷ்ரதா மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறார் ஆதிக். பயத்தில் போலீஸில் வழக்கு தொடுக்கிறார் ஷ்ரதா. ஆதிக்கும் ஷ்ரதா மீது வழக்கு தொடுக்க, வழக்கு விஸ்வரூபம் எடுக்கிறது.
பிரசவத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் மனைவி வித்யா பாலனையும் இழந்து விட்டதால், தனக்குள்ளேயே ஆக்ரோஷமான கோபத்தோடு(depression) இருந்து தினசரி மாத்திரிகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் தான் பிரபல வக்கீலாக வரும் பரத்(அஜித்).
ஷ்ரதாவிற்கு எதிராக ஆதிக் தொடுத்த வழக்கில், அரசு தரப்பு வக்கீலாக வரும் ரங்கராஜ் பாண்டே, ஆதிக்கிற்கு சாதகமாக வாதாட, ஷ்ரதாவிற்கு ஆதரவாக அஜித் வாதாடுகிறார்.
இந்த வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக முடிந்தது என்பது படத்தின் மீதிக் கதை…
அஜித் வழக்கமாக சால்ட்&பெப்பர் லுக்கில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் சாதரணமாக எண்ட்ரீ கொடுக்கும் அஜித், இடைவேளை சமயத்தில் அதகளம் பண்ணும் அந்த ஆக்ஷன் காட்சிகள் திரையரங்குகளில் நிச்சயம் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கும்.
படத்தின் வசனங்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும்படியாகவும் இருப்பது படத்திற்கு பலம். அஜித்தின் முதல் வசனமே ‘ எப்பவுமே யோசிச்சி நடக்கணும், யோசிச்சிட்டே நடக்கக் கூடாது.’ படத்தின் இரண்டாம் பாதியில், நீதிமன்றத்தில் பெண்களை தொட நினைக்கும் ஆண்களுக்கு அஜித் கூறும் அறிவுரைகள் நிச்சயம் கைதட்டி வரவேற்கக் கூடிய ஒன்று தான்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மூவரும் கதாபாத்திரங்களாகவே மாறி அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
அதிலும், ஷ்ரதா ஸ்ரீநாத் தனது கேரக்டரை மிகவும் கச்சிதமாக பூர்த்தி செய்திருக்கிறார்.
அரசு தரப்பு வக்கீலாக வரும் ரங்கராஜ் பாண்டே, தனது முதல் படம் என்பது போல் இல்லாமல், தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.
யுவன் ஷங்கரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், பின்னனி இசை தரமாக கொடுத்திருக்கிறார். அதிலும், அந்த பைட் சீனுக்கு இசை மிரட்டல் தான்… இருந்தாலும் யுவனின் மேஜிக் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங் தான்.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. ஒவ்வொரு ப்ரேமிலும் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்.
பிங்க் படத்தின் ரீமெக் என்றாலும் தல ரசிகர்க்ளுக்காக ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஹச் வினோத். ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் கொண்டாடலாம். வித்யா பாலனுடனான காதல் காட்சிகளையும் அந்த பாடலையும் சற்று தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வு சற்று சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்ட “பெண் என்பவளை அனுமதியில்லாமல், அது கட்டிய மனைவியாக இருந்தாலும் அவளது சம்மதம் இல்லாமல் உடலுறவு கொள்வது’ என்பதை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளவியலாது என்ற கருத்தை இப்படத்தில் வைத்ததற்காகவே எழுந்து நின்று கைதட்டலாம் படக்குழுவினரை…
நேர்கொண்ட பார்வை – கருத்து இருந்தாலும் கதைக்கு உயிரோட்டம் இல்லை..





