![](https://tamilveedhi.com/wp-content/uploads/2023/06/paani-poori-movie-review.jpg)
லிங்கா, சம்பிகா, குமரவேல், கனிகா, வினோத் சாகர், ஸ்ரீ கிருஷ்ணா தயாள் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால்இயக்கத்தில் ஷார்ட்ப்ளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் இணையத் தொடர் தான் “பானி பூரி”.
தற்போதுள்ள சூழலில் குழந்தைகளோடு ஒரு குடும்பமாக இணைந்து ஒரு காதல் தொடரை பார்க்க முடியாது. காரணம், இணையத் தொடர் தானே என்று கண்களை மூடிக் கொள்ளும்படியான 18+ காட்சிகளைத் தான் அதிகமாக வைத்திருப்பார்கள்.
அதையெல்லாம் தவிர்க்கும் விதமாக எந்த 18+ காட்சிகளும் இல்லாமல் 8 எபிசோடுகளை கொண்ட தொடர் தான் இந்த “பானி பூரி”.
கதைப்படி,
ஹீரோ லிங்கா மற்றும் ஹீரோயின் சம்பிகா இருவரும் காதலர்கள். சம்பிகாவின் தோழி ஒருவர், பல வருடங்களாக காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறார். அந்த திருமணம் சில மாதங்களிலே முடிவுக்கு வருகிறது.
காதலிக்கும் போது இருக்கும் அன்பு, திருமணத்திற்கு பின்பு இருப்பதில்லை என்பதை உணர்ந்த சம்பிகா, தனது காதலையும் பிரேக் அப் செய்கிறார்.
மனம் உடைந்த லிங்கா, சம்பிகாவின் வீட்டிற்கு வந்து பேச வருகிறார். சம்பிகாவின் தந்தை குமரவேல், இந்த காதல் விவகாரத்தில் தலையிட்டு ஒரு முடிவு கூறுகிறார்.
லிங்காவையும் சம்பிகாவையும் 7 நாட்கள் தனியாக ஒரு வீட்டில் லிவிங்க் டூ கெதர் முறையில் வாழ சொல்கிறார். 7 நாட்கள் கழித்து இருவரின் காதல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் என்று கூறி அனுப்பி விடுகிறார்.
இந்த முடிவை ஏற்றுக் கொண்ட இருவரும் தனி ப்ளாட் ஒன்றில் குடியேறுகின்றனர். 7 நாட்கள் கழித்து இவர்களின் காதல் எப்படியானது.? சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே படத்தின் மீதிக் கதை.
துறுதுறுவென கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறார் நாயகன் லிங்கா. சம்பிகா மீதான காதலை ஒவ்வொரு முறையும் அவர் வெளிப்படுத்தும் விதத்தில் காதல் இளவரசனாக ஜொலிக்கிறார். எந்த இடத்திலும், தனது காதலை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து அதை அழகாக கையாண்டிருக்கிறார் லிங்க.
அழகு தேவதையாக காட்சிகளில் ஜொலித்திருக்கிறார் சம்பிகா. பெண்களின் காதலையும் உணர்வையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தனக்கான உரிமையும் தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக அதை தெளித்து விட்டுச் சென்றிருக்கிறார் சம்பிகா.
தனது அழகாலும், க்யூட் எக்ஸ்ப்ரஷனாலும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் சம்பிகா.
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் ஒரு வித்தியாசமான தொடாத ஒரு காதல் கதையாக வந்திருக்கிறது இந்த “பானி பூரி”. எட்டு சீசன்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
இணையத் தொடரில் காதலர்களை தொடாத ஒரு காதல் கதையா என்று வியக்கும் அளவிற்கு ஒரு மெல்லிய இளையராஜாவின் பாடலை ரசிப்பது போன்ற ஒரு உணர்வு இந்த பானி பூரியில் இருக்கிறது.
நவ்நீத் சுந்தரின் இசையில் காதல் ஊற்றெடுக்கும் பின்னணி இசையில்…
ப்ரவீன் பாலுவின் ஒளிப்பதிவு அவ்வளவு அழகு…
கனிகா, வினோத் சாகர், ஸ்ரீ கிருஷ்ணா தயாள் என தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்தது. இந்த கேரக்டருக்கு இவரை விட்டால் ஆள் இல்லை என்று முத்திரை பதித்தது போன்ற ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருந்தார் நடிகர் குமரவேல்.
ராட்சசன் வினோத் சாகரின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது. தனக்கெல்லாம் எவன் பொண்ணு கொடுப்பான் என்று கூறி தனது மனைவியை எப்படி பார்த்துக் கொள்வேன் என்பதை கூறும் காட்சியில் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிப் பார்க்க வைத்து விட்டார் வினோத்.
பானி பூரி – காதலை காதலாக கூறிய அழகு படைப்பு..