
நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ், ஆஷிமா நர்வல், நாசர், கே எஸ் ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகிபாபு, ஓவியா, பாகுபலி பிரபாகர், ராகவன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ராஜபீமா.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எஸ் ஆர் சதீஷ்குமார். மேலும், இசையமைத்திருக்கிறார் சைமன் கே கிங். மோகன் படத்தினை தயாரித்திருக்கிறார்.
தனது அம்மாவை இழந்து தனிமையில் வாடிய ராஜா (ஆரவ்), ஒரு குட்டி யானையை கண்டதும் மகிழ்ச்சியடைகிறார். இவரது மகிழ்ச்சியைக் கண்ட ராஜாவின் தந்தை (நாசர்) அந்த யானையை விலைக்கு வாங்கி விடுகிறார்.
யானைக்கு பீமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராஜாவும் பீமாவும் இணை பிரியா நட்பாக வளர்ந்து வருகின்றனர்.
திடீரென ஒருநாள், வனத்துறை புத்துணர்வு முகாமில் இருந்து வந்த வனத்துறை காவலர்கள், பீமாவை முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர். விஷயமறிந்து முகாமிற்கு சென்ற ராஜா, அங்கு பீமா இல்லாததைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.
அதிகாரிகள் வேறு ஒரு யானையைக் காண்பித்து இதுதான் பீமா என்று கூற, ராஜா சண்டையிடுகிறார்.
இறுதியில், கடத்தப்பட்ட பீமாவை ராஜா கண்டுபிடித்தாரா இல்லையா.?? இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக ஆதவ், ராஜா என்ற கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆறடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக நின்று தனது கேரக்டருக்கு நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார். யானையுடனான பாசத்தை வெளிப்படுத்தும் இடத்தில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டார். சண்டைக் காட்சிகளிலும் தனித்துவமான உடல்மொழியை பயன்படுத்தியிருக்கிறார் ஆரவ்.
தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக வந்து செய்து கொடுத்திருக்கிறார் நாயகி. வில்லத்தனத்தில் வித்தியாசமான கோணத்தைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
செண்டிமெண்ட் காட்சிகளில் அவ்வப்போது சோகமான வசனங்களை பேசி செல்கிறார் நாசர். யோகிபாபுவின் காமெடி கலாட்டா இப்படத்தில் சுத்தமாக எடுபடவில்லை.
நடனத்தில் ஓவியா, நடிப்பில் யாஷிகா என கேரக்டர்களாக வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கின்றனர். வழக்கமான கதையை எடுத்துக் கொண்டாலும், அதில் தன்னை தனித்துவமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். மூடநம்பிக்கை, விலங்குகள் மீதான பாசம் என கதையில் சற்று மக்கள் நலனும் இருந்தது சிறப்பு.
இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
ராஜபீமா – வெற்றி




