இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான்.
படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது.
இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே, வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும். அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.” என்று கூறியுள்ளார்.