
நதிநீர் இணைப்பிற்காக ரஜினி ஒருகோடி தருவதாக பல வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம். ஆனால், அதன் தேவை இப்போது பல மடங்காக உயர்ந்து விட்டது ஒருபுறமிருக்க, ரஜினி வாயால் சொன்னதை இப்போது தன் படத்துக்காக செய்து காட்டியிருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன்.
தானே தயாரித்து இயக்கியிருக்கும் படம் தான் ‘பூமராங்’. இப்படம் நதிநீர்த்தேவையின் அவசியத்தைப் பேச வருகிறது. இளைஞர்களே ஒன்றிணைந்து அதை சாத்தியமாக்கிக் காட்டுவதாக அவர் வெளியிட்டிருக்கும் ‘பூமராங் டிரைலர்’ ஒரு எக்சாம்பிள்தான்..
அதர்வா, ஆர்ஜே பாலாஜி, இந்துஜா முதன்மைக் காதாபாத்திரங்கள் ஏற்றிருக்கும் அந்தக் காட்சிகளில் இளைஞர்கள் இணைந்து பல கிலோமீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட வாய்க்கால் ஒன்றை வெட்டியிருப்பதாகக் காட்சி விரிகிறது. ஹாலிவுட் படம் போல் தோன்றும் இந்தக் காட்சி பற்றி கண்ணனிடம் பேசினோம்.
“படத்தின் முக்கியமான காட்சி இது. நீர்த்தேவை பற்றிப் பேசுகிற படமாக பூமராங் ஆனதால் இதற்காக இந்தக் காட்சி அவசியமாகிறது. இன்றைய சினிமாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செட் போட்டு பாடல் எடுப்பதன் அநாவசியத்தைவிட கதைக்குத் தேவையாக சமூகத்துக்கு நல்ல செய்தி நோக்கத்துக்காக செலவு செய்வதையே என் போன்ற இயக்குநர்கள் விரும்புகிறோம். அதையேதான் இன்றைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக படித்த இளைஞர்கள் ஒரு சமுதாய மாற்றத்தை எதிர்நோக்கியிருப்பதால் இப்படியான காட்சிகள் எடுப்பதும், அறிவார்ந்த செய்திகள் சொல்வதும் அவசியமாகிறது.
இந்தக் காட்சிக்காக ஒரு கிராமத்தையே வளைத்து முறையான அனுமதிகள் வாங்கி அங்கிருப்பவர்கள் உதவியுடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து ஒரு மாத முயற்சியில் இந்தக் கால்வாயை வெட்டினோம். இதற்கான செலவு மட்டும் ஒரு கோடியானது.
இன்றைய கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இதை உருவாக்கி வைத்துவிட முடியுமென்றாலும் அதில் இறங்கி வேலை செய்வதையோ, அதற்குள் ஆட்கள் இயங்குவதையோ நேர்த்தியாகச் செய்ய முடியாது. அது ரசிகனை ஏமாற்றுவது போலாகும் என்பதால் இந்த அளவு முயன்றோம்.
டிரைலருக்கான விமர்சனங்களில் இந்தக் காட்சி பரவலான பராட்டுகளைப் பெற்று வருகிறது. படத்தில் பாருங்கள் இதன் முக்கியத்துவத்தை..!” என்றார்.





