
ராம்தேவ் இயக்கத்தில் சோனியா அகர்வால், பாக்யராஜ், ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மூன்றாம் மனிதன்.
இயக்குனர் ராம்தேவ் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.
போலீஸ் ஆய்வாளராக வருகிறார் பாக்யராஜ். அவரது சரகத்திற்கு உட்பட்ட பல இடங்களில் கை, கால்கள் துண்டாக்கப்பட்ட மனித உடல் ஒன்று எடுக்கப்படுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கிறார் பாக்யராஜ். எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கும் ராம்தேவை அழைத்து விசாரிக்கிறார் பாக்யராஜ்.
ராம்தேவ் அவரது வாழ்க்கையை விவரிக்கிறார்.. தான் நன்றாக வாழ்ந்து வந்ததாகவும் மதுப்பழக்கம் ஏற்பட்டதால் அதனாலே தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும் பாக்யராஜிடம் கூறுகிறார்.
இறந்தது சோனியா அகர்வாலின் கணவரான போலீஸ் அதிகாரி என்று கண்டறிகிறார் பாக்யராஜ்.
தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்துகிறார். இறுதியில் அந்த கொலை யாரால் நடந்தது.? எதனால் நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
மதுவால் ஏற்பட்ட இழப்பும், கள்ள உறவால் ஏற்படும் இழப்பும் நாட்டில் அதிகம் என்பதை இயக்குனர் இந்த படத்தின் மூலம் எடுத்து வைத்திருக்கிறார்.
நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள்… இருந்தாலும் வசன உச்சரிப்பை டப்பிங்கில் கவனித்திருக்கலாம்..
கணவன் – மனைவி உறவை “மேட்டர்” என்று கூறி அந்த உறவை கலங்கப்படுத்தியிருக்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல் பல வார்த்தைகள் படத்தின் போக்கை மாற்றியிருக்கிறது. அதற்கு பதிலாக வேறு வார்த்தைகளை பயன்படுத்தியிருந்திருக்கலாம்.
ராம்தேவின் மனைவியாக நடித்திருந்தவர் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
சொல்ல வந்த கருத்திற்கு கைதட்டல் கொடுக்கலாம், அதை சரியாக திரைக்கதையில் சொல்லியிருந்தால் எழுந்து நின்றே கைதட்டல் கொடுத்திருந்திருக்கலாம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.
கதையின் மையக்கருவிற்காக இயக்குனருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
மூன்றாம் மனிதன் – பாராட்டலாம்..





