
ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் நடிப்பில் அஹ்மத் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம் தான் இறைவன். படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் எந்த அளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
நரேன் மற்றும் ஜெயம் ரவி இருவரும் போலீஸ் ப்ரண்ட்ஸ். இருவருமே என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட்.
ஜெயம் ரவிக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நரேனுக்கு மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள். நயன்தாரா நரேனின் சகோதரியாக வருகிறார். ஜெயம் ரவி மீது நயன்தாராவிற்கு ஒரு தலை காதல்.
சைகோ கொலைகாரன் இளம் பெண்களை கடத்தி அவர்களை துன்புறுத்தி கொலை செய்து பிணத்தை ஆங்காங்கே போட்டுவிட்டுச் செல்கிறார். தொடர் கொலை நடந்து கொண்டிருக்க, வழக்கை ஜெயம் ரவியும் நரேனும் விசாரிக்கின்றனர்.
தொடர் கொலைகளை செய்து வந்த கொலைகாரனை கண்டுபிடித்து விடுகின்றனர். அப்போது நரேன் கொலை செய்யப்படுகிறார். இதனால் பெரிதும்பாதிக்கப்படும் ஜெயம் ரவி, போலீஸ் வேலையை உதறிவிட்டு நரேனின் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.
அப்போது சைகோ கொலைகாரன் ஜெயிலில் இருந்து தப்பித்து ஜெயம் ரவியை கொலை செய்ய வருகிறான்.? இறுதியில் சைகோ கொலைகாரனை ஜெயம் ரவி பிடித்தாரா.? அவன் தான் உண்மையான கொலைகாரனா.? அல்லது வேறு யாருமா.?? என்பதற்கெல்லாம் விடை இரண்டாம் பாதியில் இருக்கிறது.
தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்துமுடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அடங்க மறு படத்தில் பார்த்த அதே லுக்&பிட்’டோடு கேரக்டருக்கு பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகியாக நயன்தாரா அழகாக வந்து சென்றாலும், பெரிதான ஸ்கோப் படத்தில் அவருக்கு இல்லை.
முதல் பாதி கொலை, தேடுதல் என செல்வதால் கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் பாதி முடிவதற்குள் சைகோ கொலைகாரனை பிடித்து கொன்றுவிட்டதால், இரண்டாம் பாதி வேறு எதையோ கூற வருகிறார்கள் என்று ஏங்கியவர்களுக்கு கிடைத்ததோ பெரும் ஏமாற்றம் தான்.
அப்படி ஒரு வில்லனை பார்த்துவிட்டு, இரண்டாம் பாதியில் வில்லனுக்கும் கேரக்டருக்கும் சம்மந்தமே இல்லாத ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து இவர் தான் வில்லன் என்பதை துளியளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
ஜெயம் ரவி வில்லனை பிடிப்பதும் பின்பு விடுவதும் அதன் பின் பிடிப்பதும் பின்பு விடுவதுமென கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதெல்லாம் காமெடியின் உச்சகட்டம்.
இஷ்டத்திற்கு திரைக்கதையை ஆட்டி விளையாடியிருக்கிறார்கள்.
திரைக்கதையில் சுத்தமாக சுவாரஸ்யம் இல்லாததால் இறைவனை கொண்டாட முடியவில்லை.
யுவனின் மேஜிக் இப்படத்தில் துளியளவும் இல்லை. ஒளிப்பதிவும் பெரிதான மாயாஜாலம் நிகழ்த்தவில்லை.
இறைவன் – ஏமாற்றம்.





