
மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் படம் தான் 2018. கேரளாவில் 2018 ஆம் ஆண்டு வந்த வெள்ள பாதிப்பினை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் இதுவரை சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது.
இப்படத்தில், குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா, உள்ளிட்ட மலையாள சினிமா உலகின் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
கதைப்படி,
கதை 2018 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. மழை பொழியும் காலம் அது. கேரளா முழுவதும் கடுமையான மழைப்பொழிவால் ஆங்காங்கே சிறிது வெள்ளம் வர ஆரம்பிக்கிறது.
இந்த சூழலில், கடுமையான பணிச்சுமையால் மிலிட்டரியில் இருந்து பாதியில் வந்த டோவினோவின் வாழ்க்கை,
குஞ்சாகோ போபனின் பல வருட உழைப்பால் கட்டிய புது வீடு, மனைவி மற்றும் குழந்தை,
தனது இரண்டு மகன்கள் (நரேன் மற்றும் ஆஸிப் அலி), மருமகள், பேத்தி என மீனவ வாழ்க்கை வாழ்ந்து வரும் லால்,
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சரக்கு லாரி ஓட்டிச் செல்லும் கலையரசனின் குடும்பம்,
டிவி நிறுவனத்தில் பணிபுரியும் அபர்ணா பாலமுரளி,
இரண்டு வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவை சுற்றிக் காட்டச் செல்லும் வாகன ஓட்டி அஜு வர்கீஸின் வாழ்க்கை மற்றும் குடும்பம்,
மனக்கசப்பால் தனது மனைவியை பிரிந்து இருக்கும் வினித் சீனிவாசனின் வாழ்க்கை மற்றும் குடும்பம்,
என படத்தில் பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் வேலையில் தான் எதிர்பாராத இந்த வெள்ளமும் வருகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்கள் எப்படி தப்பித்தார்கள்.? யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள்.? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார்.??? என்பதை 2.30 மணி நேரத்தில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய படம் தான் “2018”.
படத்தின் முதல் பாதி முழுவதும் கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு நகர்ந்து செல்வதால், இரண்டாம் பாதியில் தான் வெள்ளத்தின் பாதிப்பை காண முடிகிறது.
மணித்துளிகள் அதிகமாக அதிகமாக வெள்ளத்தின் நீர்மட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.,
இந்த கேரக்டரை எப்படியாவது காப்பாத்திடுங்க… யாரையும் கொன்றாதீங்க என்ற மனப்போக்கிலேயே முழு படத்தையும் பார்க்க வைத்து விட்டார் இயக்குனர்.
மிகவும் நேர்த்தியான படைப்பாக கொடுத்து பெரும் பாராட்டை அள்ளி விட்டார் இயக்குனர்.
ஒட்டுமொத்த கேரளா வெள்ளத்தை தத்ரூபமாக கண்முன்னே நிறுத்தி கண்ணீரை கொண்டு வர வைத்து விட்டார் இயக்குனர்.
படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியோடு செய்து கதாபாத்திரங்களாகவே மாறியிருந்தனர்.
வெள்ளம் என்ற ஒன்று வந்த போது தான் நமக்குள் இருக்கும் பேரன்பு அனைவரிடத்திலும் எட்டிப் பார்த்தது. அந்த பேரன்பை இந்த படத்திலும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.
இந்த அளவிற்கான பட்ஜெட்டில் படத்தினை தயாரிக்க வந்த தயாரிப்பாளருக்கு தான் வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.
பாம்பு இருந்தும் அதை காப்பாற்றி அனுப்பி ஃபைலை கொண்டு வந்தது, தனது வீட்டை திறக்க முடியாதபடி மரம் விழுந்து லாக் செய்தது, கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றுவது, மீனவர்கள் தங்கள் படகினை சுமந்து வருவது, சுவற்றில் ஏறிய போது சுவர் இடிந்து விழுவது, க்ளைமாக்ஸ் காட்சியில் நீருக்கு அடியில் கால் சிக்கிக் கொள்வது, என படத்தின் இரண்டாம் பாதி காட்சியில் பல இடங்களில் சீட்டின் நுனியில் இருக்க வைத்து விட்டார் இயக்குனர்.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.. வெள்ளக் காட்சி எடுக்கப்பட்ட விதத்தினை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது. ஸ்ரீஜா ரவியின் தமிழ் வசனங்கள் நன்றாகவே கைகொடுத்திருக்கின்றன.
நோபின் பாலின் பின்னணி இசை கதையோடு நாமும் நகர்ந்து செல்ல கைகொடுத்திருக்கிறது.
2 மணி நேரத்தில் 2018ல் கேரளாவில் என்ன நடந்தது என்பதை வெளிச்சமாக காட்டிய படக்குழுவிற்கு பாராட்டுகள்.
PRODUCERS: VENU KUNNAPPILLY, C K PADMA KUMAR, ANTO JOSEPH
DIRECTOR OF PHOTOGRAPHY: AKHIL GEORGE
PRODUCTION DESIGNER: MOHAN DAS
EDITOR: CHAMAN CHAKKO
ORIGINAL BACKGROUND SCORE: NOBIN PAUL
AUDIOGRAPHY: VISHNU GOVIND
MUSIC: NOBIN PAUL, WILLIAM FRANCIS
CO-WRITER: AKHIL P DHARMAJAN
LINE PRODUCER: GOPAKUMAR G K
COSTUME DESIGNER: SAMEERA SANEESH