
படித்துவிட்டு தனியார் கடை ஒன்றில் வேலை பார்க்கிறார் நாயகி காவ்யா சுரேஷ். இவரது அண்ணன் சேரன் வருமான வரித்துறை அதிகாரியாக வருகிறார். மாமாவாக வரும் தம்பி ராமையா வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். வீட்டோடு இருக்கும் அம்மா என அழகான நடுத்தர வர்க்க குடும்பம் இது.
அடுத்ததாக நாயகன் உமாபதி, படித்துவிட்டு தனியார் ரேடியோ ஸ்டேஷனில் ஆர் ஜே-வாக இருக்கிறார். இவரது அக்கா சுகன்யா ஜவுளி(பொட்டிக்) வியாபாரம் செய்து வருகிறார். சித்தப்பாவாக வரும் எம் எஸ் பாஸ்கர் தனியார் கம்பெனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த குடும்பம் சற்று வசதியான ஜமீன் வீட்டுக் குடும்பம்.
நாயகன் உமாபதிக்கும் நாயகி காவ்யா சுரேஷுக்கும் காதல். வீட்டு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறார் நாயகி காவ்யா.
இரு வீட்டார்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட, அதன் பிறகு நடக்கும் திருமண ஏற்பாடுகளே படத்தின் மீதிக் கதை..
மிடுக்கான நேர்மையான அதிகாரியாக வரும் சேரன், வீட்டில் தங்கைக்கு நல்ல அண்ணனாகவும் அம்மாவின் சொல் கேட்கும் மகனாகவும் தனது அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அளவாக செலவு செய்து திருமணத்தை நடத்த இவர் எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும் நிசப்தம் தான்.
தம்பிக்கு நல்ல ஒரு அக்காவாக வரும் சுகன்யா, கோபத்தை, பாசத்தை என அனைத்து நடிப்பையும் தனது இரு விழிகளாலும் சொல்லிவிட்டுச் செல்கிறார்,.
நாயகி காவ்யா சுரேஷ் காதல், எமோஷன் , நடனம் என அனைத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகன் உமாபதி அழகாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி வேண்டுமோ என்றே தோன்றுகிறது.
பாலசரவணின் காமெடி ஒரு சில எடுபட்டிருக்கிறது.
சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பெரிதாக எழவில்லை என்றாலும், பின்னனி இசை ஓகே ரகம் தான்.
ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு கலர்புல்.
சற்று சீரியல் மாதிரி சென்றாலும், திருமணம் என்று பேச்செடுத்தால் இந்த படம் நினைவுக்கு நிச்சயம் வந்து செல்லும். பட்ஜெட் திருமணம்.
சேரன் கம் பேக்…
திருமணம் – சேரனின் விருந்தை ஒருமுறை சுவைக்கலாம்.





