
தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியபோது, லட்சக் கணக்கான வீடுகள், கோடிக் கணக்கான மரங்கள் சேதமடைந்தது. பல வீடுகளில் ஓடுகள் காணவில்லை. இந்த நிலையில்தான், கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில், குமார் என்ற விவசாயி, தனது வீட்டின் மேல் போடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ஓடுகளையும் கீழே இறக்கி வைத்துவிட்டார்.
இது குறித்து விவசாயி குமார் கூறும் போது, “கஜா புயலில் எங்கள் வீட்டின் ஓடுகள் முழுமையாகக் காற்றில் பறந்து உடைந்துவிட்டது. அதன் பிறகு, கடன் வாங்கி மீண்டும் ஓடுகளைப் போட்டோம். வீட்டை இழந்த எனக்கு அரசு வீடு கேட்டு, மனு கொடுத்தும் இதுவரை கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்க பயமாக உள்ளது.
அதனால்தான் முன் எச்சரிக்கையாக, நண்பர்கள் துணையோடு ஓடுகளை இறக்கி வைத்துவிட்டேன். இனிமேலாவது எனக்கு அரசு வீடு கொடுத்தால் எதிர்வரும் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட என் மனைவியுடன் நிம்மதியாக இருப்பேன்” என்றார்.





