
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படத்தினை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடிகர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா, தியாகராஜன், பாக்யராஜ், பிரபு, இளவரசு, அனிகா, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா, முனீஸ்காந்த், ஆர் பாண்டியராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “PT Sir”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். இசையமைத்திருக்கிறா ஹிப் ஹாப் தமிழா ஆதி. படத்தொகுப்பினை பிரசன்னா கவனித்திருக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே கணேஷ் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணிக்கலாம்…
நாயகன் ஹிப் ஹாப் ஆதி, தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் நாயகி காஷ்மிரா மீது ஒரு தலை காதலில் இருக்கிறார் ஆதி.
அதே பள்ளி நிறுவனத்தைச் சேர்ந்த கல்லூரியில் பயின்று வருகிறார் அனிகா. ஒருநாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது, இரவு நேரத்தில் நான்கு இளைஞர்கள் அனிகா மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து விடுகிறார் அனிகா.
வீட்டிற்கு வரும் அனிகாவை பார்த்து அவரது தந்தையாக வரும் இளவரசு கவலையடைகிறார். அவரது தாய், நீ அணிந்த உடையால் தான் இந்த பிரச்சனை என்கின்றார். வீட்டில் மட்டுமல்லாது அந்த தெரு முழுவதும் அனிகாவின் உடை மீதான விமர்சனத்தை வைக்கின்றனர்.
தொடர்ந்து, நால்வர் அனிகாவை சீண்டல் செய்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட, அனிகாவை வசை பாடுகின்றனர் அனைவரும். இதனால், கல்லூரியில் இருந்து அனிகாவை நீக்க முற்படுகின்றனர்.
அச்சமயம், கல்லூரி நிறுவனராக வரும் தியாகராஜனை சந்திக்கிறார் அனிகா. மறுநாள், அனிகா இறந்துவிடுகிறார். இது தற்கொலை என அனைவரும் கூற, இது கொலை என்று வழக்கு தொடுக்கிறார் ஆதி.
இந்த கொலையை செய்தது தியாகராஜன் தான் என்று அவர் மீது வழக்கு தொடுக்கிறார் ஆதி.? இறுதியாக இந்த வழக்கு என்னவானது.?? தியாகராஜன் எப்படி இந்த வழக்கிற்குள் வந்தார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் ஹிப் ஹாப் ஆதி, கனகவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் கனகவேல் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். மற்ற இடங்களில் இந்த இடத்துல இந்த ஓவர் ஆக்டிங் வேண்டுமா சாரே என்று தான் சொல்ல வைத்திருக்கிறார். கதை தான் ஹீரோ என்று நினைக்காமல், கதைக்குள் மாஸ் பில்டப் வேலைகளை செய்து வைத்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.
கதைக்கான நாயகனாக ஜொலிக்காமல், மாஸ் தான் தனக்கான இலக்கு என்று பயணித்தால் எந்தகாலமும் ஜெயிக்க முடியாது என்பதற்கு இப்படமே சான்றாக முடியும்.
இயக்குனரின் கதைக்களம், திரைக்கதை என அனைத்தும் பாராட்டும்படியாக இருந்தது. மற்ற நடிகர்களின் நடிப்பும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. அதிலும், இளவரசு ஒருபடி மேலே சென்று தனது திறமையை நிரூபித்திருக்கிறார். வில்லனாக வந்த தியாகராஜனும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
மேஜிக் வால் என்று பள்ளியில் வைக்கப்பட்ட சுவர் மாணவர்களின் மனதில் உள்ளதை வெளிக்கொணரும் விதமாக இருந்தது பாராட்டுதலுக்குறியது.
நாயகிகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையிலும் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாமே என்றும் சொல்லத் தோன்றியது. பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை.
ஒளிப்பதிவு நன்றாகவே வெளிச்சம் காட்டியிருக்கிறது. படத்திற்கு நன்றாகவே உறுதுணையாக நின்றிருக்கிறது.
மொத்தத்தில்,
PT Sir – கதைக்கான நடிப்பு இன்னும் வேணும் ஆதி சார்