
நடிகை தீபா சங்கர், சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி குறித்து பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான அனுபவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு காலத்தில் பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள், அவர்களிடம் எளிமை இருக்காது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தை முழுவதுமாக மாற்றியவர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி,” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒருமுறை சிவகார்த்திகேயன் என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தார். ஆனால் பெரிய நடிகரின் வீட்டிற்குப் போகிறோம், அங்கே வாட்ச்மேன் ‘நீங்கள் யார்?’ என்று கேட்டால் சங்கடமாகிவிடுமோ என்ற தயக்கத்தில் நான் செல்லவில்லை.
பின்னர் ஆர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஹோட்டலுக்கு அழைப்பு வந்தது. அங்கு பல முன்னணி நடிகர், நடிகைகள் இருந்தனர். இருந்தாலும் ஆர்த்தி நேராக என்னிடம் வந்து அருகில் அமர்ந்தார்.
‘நீங்க நல்லா சாப்பிடணும்… நீங்க சாப்பிடுற அழகை நான் பார்க்கணும்’ என்று அன்பாகச் சொல்லி, நீண்ட நேரம் என்னுடன் மனம் விட்டு பேசினார். அந்த அன்பும், எளிமையும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
அந்த ஒரு சந்திப்பே, பணக்காரர்களைப் பற்றிய என்னுடைய தவறான எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அந்த தருணத்தை என் வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாது,” என்று உணர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.





