பணியாளனாக வேலைக்கு சேர்ந்து தனது முதலாளியின் மகளான நந்திதாவை காதல் புரிந்து திருமணமும் செய்து கொள்கிறார் எஸ் ஜே சூர்யா.
அதிகமான சொத்துகளோடு நந்திதாவோடு வாழ்ந்து வருகிறார். 3 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். மிகவும் ஏழ்மையில் இருந்து வந்ததால், எதையும் பணக்கார தோரணையில் செய்து கொள்ளும் பழக்கமுடையவராக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. பணக்காரியாகவே பிறந்ததால் எதையும் திமிராக செய்யக்கூடியவராக இருக்கிறார் நந்திதா.
தாய், தந்தை இல்லாமல் இரு கிறிஸ்துவ ஆசிரமத்தில் வாழ்ந்து வருகிறார் ரெஜினா. சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் ஆசிரமத்திற்கு ஏற்படுகிறது. இச்சமயத்தில் தான், எஸ் ஜே சூர்யா – நந்திதாவின் குழந்தையை கவனிக்க ஒரு பெண் தேவை, அதற்கு அதிகப்படியான சம்பளம் தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு செல்கிறார் ரெஜினா.
குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்கிறார் ரெஜினா. எஸ் ஜே சூர்யாவிற்கு ரெஜினா மீது மோகம். அவரை அனுபவித்துக்கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி அதை செயல்படுத்தியும் விடுகிறார்.
கூடவே, அங்கு பணிபுரியும் நான்கு பணியாட்களும் ரெஜினாவை கற்பழித்து விடுகிறார்கள். கொலையும் செய்யப்படுகிறார் ரெஜினா. இவர்களை பழி வாங்க ஆவியாக வருகிறார் ரெஜினா.. அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் எஸ் ஜே சூர்யா மிரட்டியெடுத்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வசனங்களின் உச்சரிப்பு, பாவனை , சந்தோஷம், தவிப்பு, ஏக்கம் என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து அசர வைத்திருக்கிறார். எஸ் ஜே சூர்யாவிடம் இதுவரை பார்த்திராத ஒரு நடிப்பை இப்படத்தில் நிச்சயம் காணலாம்.,
நந்திதாவின் புதிய ஒரு பரிமாணத்தையும் இதில் காணலாம். வில்லத்தனமான நடிப்பை கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். ரெஜினா ஒரு படி மேல் சென்றுவிட்டார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான யதார்த்தமான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
படத்தின் ஆகப்பெரும் பலம் இசை தான். யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார்.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு செல்வராகவனின் படத்திற்கே உள்ள ஒரு ஃபீல் இதிலும் கிடைக்க வைத்திருக்கிறார்.
பணியாட்களாக நடித்து நால்வரும் பெர்பெக்ட் கதாபாத்திரங்கள்
முதல் பாதியை பார்த்ததும், செல்வராகவனின் மைல்கல்லில் மேலும் ஒரு வெற்றி மகுடம் என்று நினைத்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதி பெரும் சோதனை தான்.
வழக்கமான படமாக இல்லாமல், தனி ஒரு வழியை எடுத்து பயணித்திருந்தாலும், இரண்டாம் பாதியில் அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பலரையும் சோதனையாக்கிவிட்டுவிட்டார்.
இரண்டாம் பாதியை மட்டும் சற்று செதுக்கியிருந்து, ஆங்காங்கே எட்டி பார்த்த வேண்டாத காட்சிகளை நீக்கியிருந்தால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை – முதல் பாதி சாதனை, இரண்டாம் பாதி வேதனை.