
Written & Directed By Balusailash
Cinematography : Jainul jafri
VFX & Editing: MK Vicky
Music: Gokul Raj
Mix & Master : Benny Phelixx
Actors: VJ Thara , Orange Mittai Prabha, Ajju Arjun, Vishnu Chandrasekar, Prathap Kumar, Anihsa, Jagaa,
Review
ஆரஞ்ச் மிட்டாய் பிரபா, விஷ்ணு சந்திரசேகர் மற்றும் பிரதாப் குமார் மூவரும் நண்பர்கள். இதில், பிரபா தனது ஊர்கார பெண்ணான விஜே தாராவை ஒரு தலையாக காதலிக்கிறார். இவரின் காதலை ஏற்க மறுக்கிறார் தாரா.
ஒருகட்டத்தில், தாரா மீது பிரபாவிற்கு வெறுப்பு வர, அவர் தனிமையில் இருக்கும் போது, அவர் மீது ஆசிட் வீச முற்படுகிறார் பிரபா. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென, கடற்கரை ஓரத்திற்கு வந்து விடுகிறார் பிரபா.
என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்னரே, அவரின் எதிரே கடவுளாக காட்சியளிக்கிறார் அஜ்ஜு அர்ஜுன். காதலிக்கவில்லை என்பதற்காக எப்படி ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீச நினைப்பாய் என்று கூறி பிரபாவை பெண்ணாக மாற்றி விடுகிறார் கடவுள்.
நீ காதலித்த பெண் என்று உன்னை காதலிக்கிறேன் என்று சொல்கிறாரோ அப்போது தான் நீ மீண்டும் ஆணாக மாறுவாய் என்று கூறி மறைந்து விடுகிறார் கடவுள். பெண்ணாக மாறிய அந்த பெண் தான் அனிஷா.

அனிஷாவாக ரூமிற்குள் வரும் பிரபாவை கண்டதும் ஷாக் ஆகின்றனர் விஷ்ணு மற்றும் பிரதாப். இதில், விஷ்ணு மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனென்றால், தான் தினசரி கனவில் காணும் பெண் தோற்றத்தில் வந்து நிற்கிறார் அனிஷா.
தனது கதையை நண்பர்களிடம் கூறுகிறார் அனிஷா. தாராவிடம் எதுவும் கூறாமல், அனிஷாவை அவருடன் தங்க வைத்துவிடுகின்றனர் நண்பர்கள். இறுதியில் எதற்காக பிரபாவை தாரா காதலிக்கவில்லை.? பெண்ணாக மாறிய பிரபா மீண்டும் ஆணாக மாறினாரா இல்லையா.?? தனது கனவு நாயகி அனிஷாவை கரம்பிடித்தாரா விஷ்ணு.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் க்ளைமாக்ஸில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த கதாபாத்திரத்திற்கு இவர்கள் தான் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்று நடிகர், நடிகைகளை மிகச் சரியாக தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு முதலில் பாராட்டுகள்.
கலகலப்பாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தனது வெகுளித்தனத்தால் கதை முழுவதும் பரவி படத்தை பார்க்கும் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார் அனிஷா. சின்ன சின்ன இடங்களில் கூட தனது கண்களால் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அடுத்தபடியாக, விஜே தாரா அழகோடு சேர்ந்து நடிப்பிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். எதனால் பிரபா மீது தனக்கு காதல் வரவில்லை என்று அவர் கூறும் காரணம் டச். அந்த இடத்தில் அவரது முக பாவனைகள் அனுபவ நடிகர்களின் நடிப்பைக் கொடுத்திருந்தது பலம்.

துறுதுறுவென தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார் பிரபா. கனவு தேவதையை காதலிக்கும் விஷ்ணு, தனது நண்பன் மீது அலாதி அன்பு வைத்திருக்கும் பிரதாப் குமார் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை மிக அளகாகவும் அளவாகவும் செய்து முடித்திருக்கின்றனர். கடவுளாக நடித்திருக்கும் அஜ்ஜு அர்ஜுன் பளிச்சென்று இருக்கிறார்.
நல்லதொரு “நாட்”டை கையில் எடுத்த இயக்குனர் அதனை மிகச் சரியான முறையில் திரைக்கதை அமைத்து நல்லதொரு படைப்பாக கொடுத்திருக்கிறார். ஒரு பெண் வேண்டாம் என்றால் அதற்கு பின் என்ன காரணம் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள், பெண்களுக்கும் மனது இருக்கிறது, அவர்களது எண்ணங்களுக்கும் ஒரு ஆண்மகன் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் படத்தினை எடுத்திருக்கிறார் இயக்குனர். அரை மணி நேரத்தில் தன்னால் படம் பார்ப்பவர்களுக்குள் நல்லதொரு எண்ணத்தை கொண்டு சேர்க்க முடியும் என்று எண்ணி இயக்குனர் எடுத்த முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது.
தரமான சினிமா எடுக்கப்பட்ட ஒரு உணர்வை இந்த பேக் ஐடி கொடுத்து விட்டது. ஒளிப்பதிவில் எந்தவொரு சமரசமும் செய்யாமல், நல்லதொரு வெளிச்சத்தோடு படத்தின் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். நண்பர்களின் ரூமிற்குள் வைக்கப்பட்ட ஷாட் அனைத்தும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்.
கோகுல் ராஜ் அவர்களின் இசையில் பின்னணி இசை கதையோடு சேர்ந்து நாமும் பயணம்புரிய பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. நடுவில் வரும் மொட்டை மாடி குத்து பீட் ஆட்டம் போட வைத்திருக்கிறது.





