
தமிழ் சினிமாவில் சில காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர் சாதி, சாதி.. இந்த இயக்குனர் அந்த சாதியை பெருமையாக சொல்கிறார், அந்த இயக்குனர் அந்த சாதியை பெருமையாக சொல்கிறார் என்று பல இயக்குனர்கள் தங்களின் சாதிப் பெருமையை தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சமூக நீதியையும் சமத்துவத்தையும் தூக்கிப் பிடிக்கும் படத்தினையும் சாதிப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் இங்கு சிலர் செய்து கொண்டிருக்கிறார். சரி, நாம படத்துக்குள்ள போயிடலாம்.. இந்த சாயத்தின் மீது எந்த சாதி விழுந்தது என்று பார்த்துவிடலாம்.
கதைப்படி,
பொன்வண்ணனும் போஸ் வெங்கட்டும் ஊரில் நல் மதிப்பை பெற்று வாழும் நல்லவர்கள். பொன்வண்ணன் ஊர் நாட்டுத் தலைவராக வருகிறார். ஊர் நாட்டு கணக்குப்பிள்ளையாக பொன்வண்ணனுக்கு வலது கையாக இருக்கிறார் வேற்று சாதிக் காரரான இளவரசு.
ஊரில் தனது சாதியை மட்டுமே பெரிதாக வளர்க்க வேண்டும், தனது சாதியே உயர்ந்த சாதி என்று வன்மத்தோடு சுற்றித் திரிபவர் தான் வில்லனாக வரும் ஆண்டனி சாமி.
பொன்வண்ணன் மகனும் (அபி சரவணன்) இளவரசு மகனும் வேற்று சாதிக்காரர்களாக இருந்தாலும், பள்ளி நட்பு, கல்லூரி நட்பு என்று இவர்களின் நட்பு பிரிக்க முடியா சக்தியாக இருக்கிறது.
இந்நிலையில், போஸ் வெங்கட்டின் அண்ணன் மகளாக வரும் நாயகி ஷைனியை முறைப்பையனான அபி சரவணனுக்கு திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் அனைவரும் முடிவெடுக்கிறார்கள். காதலித்த நாயகனே தனக்கு கணவனாக கிடைக்கப்பெறுகிறானே என்று நாயகி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாலும், நாயகன் அபி சரவணனுக்கோ நாயகியை பிடிக்கவில்லை.
இந்த காதல் விவகாரத்தை வைத்து அபி சரவணனை பகடைக் காயாக பயன்படுத்தி சாதிப் பிரச்சனையை தூண்டி விடுகிறார் வில்லன் ஆண்டனி சாமி.
அதன்பிறகு அபி சரவணனின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் அபிசரவணன் இப்படத்தின் முதன்மை நாயகனாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவனாக ஆரம்பித்து ஒரு ரெளடியாக மாறும் தருணத்தில் நன்றாகவே ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நாயகனாக வளர வேண்டும் என்றால் அதற்கான மெனக்கெடலை சற்று முதலீடு செய்து தான் ஆக வேண்டும் ஹீரோ சார்.. நடனத்தில் சுத்தமாக எந்த ஒரு ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை அபி சரவணன். ஒரு சில இடங்களில் ஓவர் பெர்பார்மன்ஸை கொடுத்ததையும் சற்று குறைத்திருக்கலாம்.
நாயகி ஷைனி கதாபாத்திரத்திற்கு பொருந்திருக்கிறார். நடிப்பில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணிக்கும் வாய்ப்பை ஷைனி நிச்சயம் பெறுவார்.
பொன்வண்ணன், இளவரசு, சீதா, போஸ் வெங்கட், உள்ளிட்ட நடிகர்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் தான். தனது பங்கு நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.
வில்லனாக வந்த ஆண்டனி சாமியே இப்படத்தின் இயக்குனர் ஆவார். ஹீரோவிற்கே சண்டைக் காட்சி இல்லாத நிலையில் வில்லனுக்கே சண்டைக் காட்சி வைத்திருக்கிறார் வில்லனான இயக்குனர். ஹீரோவுக்கும் வில்லனுக்குமான சண்டைக் காட்சி அல்ல, வில்லனுக்கும் வில்லனுக்குமான சண்டைக் காட்சிதான் அது.
உயர் சாதிக்காரன் தாழ்ந்த சமுதாயத்தைச் சார்ந்த சாதிக்காரனை வெட்டுவதும் கொலை செய்வதுமான கட்டமைப்பை எப்போது தான் இந்த சினிமாவில் இருந்து எடுக்கப்போகிறோர்களோ என்னவோ.?
பல கொலை செய்யும் போது வீரமாகவும், அதன் அடுத்த காட்சியிலேயே ஹீரோ திருந்துவதும் மாதிரியான காட்சியமைப்பை என்ன மனநிலையில் நாம் எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
ஹீரோவுடன் பல வருட நட்பான நண்பனை, வில்லன் ஒரு நிமிடத்தில் பழி சுமத்தி ஹீரோவையும் வில்லனாக்கி விடுகிறார் ஆண்டனி சாமி. அதனால், ஹீரோவும் வில்லனாகி விடுகிறாராம். அடடா!!
சாதி சாதி சாதி… போதும் விடுங்கப்பா சாமி…





