பல விசித்திரமான கதைகளை கேட்டிருப்போம். அதில் சில நிக்ழ்வுகள் நடந்தேறினால் எவ்வாறு இருக்கும். அப்படியாக ஒரு பெரும் பணக்காரரை திருமணம் செய்து கொண்டதால் தற்போது பல ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ள தருணம் சீனாவில் அரங்கேறியுள்ளது.
ஆம், ஷென்சென் காங்தாய் என்ற சீன மருந்து நிறுவன தலைவர் டு வெய்மென், தனது மனைவியை விவாகரத்து செய்ததால், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டு வெய்மென்(56). கல்லூரியில் வேதியியல் படித்த இவர், 1987-ல் ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தார். 95-ல் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளரானவர், 2004-ல் காங்தாய் பையாலஜிகல் புராடக்ட்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை தொடங்கினார். 2009-ல் மின்ஹாய் என்ற நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். 2017-ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஆகும்.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. பிப்ரவரியிலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சி ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
இந்நிறுவனத்தில் மே 2011 முதல் 2018 வரை அவரது மனைவி யுவான் லிபிங்(49) இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் துணை நிறுவனமான பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக லிபிங்கை, டு வெய்மென் கடந்த மாதம் விவாகரத்து செய்தார். அதன் காரணமாக தனக்கு சொந்தமான பங்குகளிலிருந்து 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவான் லிப்பிங்கிற்கு மாற்றினார். அப்பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் யுவான் லிப்பிங் இடம்பிடித்துள்ளார்.
விவாகரத்தினால் டு வெய்மென்னின் நிகர சொத்து மதிப்பு ரூ.49 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.23 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது. விவாகரத்து செய்தியால் நிறுவனத்தின் பங்குகளும் இன்று (ஜூன் 2) 3.1% வீழ்ச்சியடைந்துள்ளன.