
பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘பரியேறும் பெருமாள்’.
படம் வெளியான முதல் நாளில் இருந்து இப்படத்தை பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தி அனைவரின் பாராட்டையும் இப்படம் பெற்றது.
வெளிநாடுகளுக்குச் சென்று சிறந்த படத்திற்கான பல விருதுகளையும், சான்றிதழ்களையும் வாரிக் குவித்தது.
அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் விதமாக, தமிழக பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பரியேறும் பெருமாள் படத்தின் கதைச் சுருக்கம் இடம் பெற்றுள்ளது. நகை, அழுகை, சிறுமை, மருட்கை, அச்சம், பெருமை, சினம், உவகை என அனைத்தையும் தனித்தனியாக படத்தின் கதையை பிரித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
இதுவே, ஒரு படத்தின் முழு வெற்றியாக பார்க்கப்படும். பல படங்கள் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டாலும், ஒரு சில படங்கள் வாழ்வியலுக்காகவும், வருங்கால சந்ததியர்கள் வரலாறு அறியும் பொருட்டாகவும் உருவாக்கப்படும்.
அந்த ஒரு சில படங்களில் முக்கிய இடத்தை தக்க வைத்துள்ளது ‘பரியேறும் பெருமாள்’.





