
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள “வீரமே வாகை சூடும்” திரைப்படம் வரும் 26ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் மாரிமுத்து இப்படத்தின் அனுபவங்களை கூறியுள்ளார்.
அதில், ” ‘வீரமே வாகை சூடும்’ இயக்குனர் து.ப.சரவணனின் முதல் படம். ஒரு இயக்குனருக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்த விஷால் சாருக்கு நன்றி. ட்ரைலர் பார்க்கும் போதே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பொறி பறக்கிறது. இசைஞானியின் இசைவாரிசு மற்றும் அசல் வாரிசு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக ஒரு வேள்வியே நடத்தியிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரின் இசை, படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும்.
விஷாலுடன் இது எனக்கு 5வது படம். மருது-வில் ஆரம்பித்து தொடர்ந்து அவருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். அன்றிலிருந்து VFF நிறுவனமும், விஷால் சாரும் காட்டும் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவர் கடும் உழைப்பாளி. நடிப்பு, தயாரிப்பு, சங்கப் பணிகள் என்று 24 மணி நேரமும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளி. அதையும் விட அவர் மிகப் பெரிய மனிதாபிமானி. படப்பிடிப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர் வரை யாருடைய மனதும் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.

இப்படத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தார் இயக்குனர். இறுதியாக வீரமே வாகை சூடும் என்று கூறினார். இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக தோன்றியது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என்று இருப்பது போல், சக்திவாய்ந்த பெயராக இருந்தது. இந்த கதைக்கும், கதாநாயகனுக்கும் சாலச் சிறந்ததாக இருந்தது. வீரம் என்ற சொல்லுக்கு விஷால் சாரைப் பொருத்திப் பார்க்கலாம்.
ஒருநாள் படப்பிடிப்பின் போது விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி சார் வந்திருந்தார். அப்போது நான் கை கொடுத்தேன், அவரும் கொடுத்தார். 3 நாட்களுக்கு கை வலித்தது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை, அந்த அளவுக்கு உடம்பை இரும்பு மாதிரி வைத்திருக்கிறார். அப்பாவே அப்படி என்றால் மகனைப் பற்றி நினைத்துப் பாருங்கள். விஷால் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு அடியும் தூள் பறக்கிறது. விஷால் படிப்பிடிப்பு தளத்தின் போது இரண்டு சண்டைக் காட்சிகளை எனக்கு காண்பித்தார். பார்த்ததும் மிரண்டு போனேன். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
இயக்குனர் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். VFF நிறுவனம் அதிக செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
டிரைலரில் ஒரு காட்சியைப் பார்த்திருப்பீர்கள். விஷாலிடம் நான் சண்டையை நிறுத்தப் போறதில்லையா? என்று. அதற்கு, அதை என் எதிரிதான் முடிவு பண்ணனும் என்பார். இதுதான் இப்படத்தின் கதை.
இப்பட வெளியீட்டின் போது ( jan 26 ) ஊரடங்கு அனைத்தும் நிறைவு பெற்று அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
‘அட்ரங்கி ரே’ என்ற தெலுங்கு படத்தின் கதாநாயகி டிம்பிள் எனக்கு மகளாக நடித்து இருக்கிறார். இப்படத்தில் மருமகளாக நடித்திருக்கிறார்.
மேலும், இயக்குனரின் முதல் படம் அவருக்கு வெற்றி படமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார்.





