
இயக்கம்: சரங் தியாகு
நடிகர்கள்: கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், விடிவி கணேஷ், துளசி, சந்தானபாரதி, சிபி ஜெயகுமார்
ஒளிப்பதிவு: கெளதம் ராஜேந்திரன்
இசை: சித்துகுமார்
தயாரிப்பு: மினி ஸ்டூடியோ வினோத் குமார்
பள்ளி பருவத்திலிருந்தே கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் நண்பர்கள். பள்ளி பருவ காதல் முதல், கல்லூரி காதல் வரை சேரா காதல் கதையாக கிஷன் தாஸின் கதை இருக்கிறது.
தொடர் தோல்வி காதலாகவே இவரது வாழ்க்கை பயணப்பட்டு வருகிறது. வழக்கம் போல், அப்பா கூறும் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறார் கிஷன்.
திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியல் அலுவலகம் அது. அங்கு, சீனியர் மேனஜராக இருக்கிறார் ஷிவாத்மிகா.
மோதலில் ஆரம்பிக்கும் இவர்களுக்கிடையேயான நட்பு, பின்பு நல்லதொரு புரிதலில் செல்கிறது. இறுதியில் கிஷன் தாஸுக்கு இந்த காதலாவது கைகொடுத்ததா இல்லையா.? காதல் என்பது என்ன என்பதை கிஷன் தாஸ் புரிந்து கொண்டாரா.? உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை இருக்கிறது.

கதைக்கேற்ற நாயகனாக கிஷன் தாஸ் தென்பட்டாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று பெட்டராக பண்ணியிருந்திருக்கலாமே என்ற எண்ணத்தையும் வர வைத்துவிட்டார்.
ஹர்ஷத் கானின் நடிப்பானது படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். டைமிங் காமெடி, ஹீரோவுக்கு சரியான Counter என ஒவ்வொரு காட்சியை மிக அழகாக நகர்த்திச் சென்று படத்தை நல்லதொரு எண்டர்டெயின்மெண்டாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நல்லதொரு எதிர்காலம் ஹர்ஷத் கானுக்கு இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஷிவாத்மிகா படத்தின் மற்றொரு பில்லர் என்றே கூறலாம். அவரின் கண்களும், நடிப்பும் அந்த கதாபாத்திரத்தை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருக்கிறது. இதுதான் ஷிவாத்மிகாவிற்காக எழுதப்பட்ட கதை என்று கூறும் அளவிற்கு மிகவும் அழகாக தனது அஞ்சலி கதாபாத்திரத்தை தாங்கி நிறுத்தியிருக்கிறார் ஷிவாத்மிகா.

காமெடியோடு கலந்த சின்ன சின்ன செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார் விடிவி கணேஷ்.
காதல் என்பது என்ன என்பதை மிகவும் கணமான ஒரு கதையோடு ஆரோமலே படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். மிகவும் மெல்லிய நூல் போன்ற ஒரு பொருளைக் கொண்டு படம் முழுவதிலுமே அதன் தாக்கத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
காதல் என்பது பணிவு காட்டுவதோ அல்லது கணிவு காட்டுவதோ அல்ல என்பதை மிக அழகான காட்சிகளோடு படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரங் தியாகு.
சித்துகுமாரின் இசையில் பின்னணி இசை நெருடலாக இருந்தது. பாடல்களும் இனிமை தான். கெளதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஆரோமலே – ஃபீல் குட்..





