நாம் மிக அலட்சியமாக பயன்படுத்தும் பொதுக்கழிப்பறை ஒரு சிலருக்கு கருவறையாக இருக்கிறது என்ற கதையைப் பேசி இருக்கிறது கபிலவஸ்து.
பொது கழிப்பறையில் பிறந்த மகனைத் தொலைத்த தாய் முப்பது வருடங்களுக்கு பிறகு மகனைத் தேடி வருகிறார். தேடிவந்த இடத்தில் மகன் மற்றும் மகன் சார்ந்த மனிதர்களின் ப்ளாட்பார வாழ்க்கை படமாக விரிகிறது.
படத்தை எழுதி இயக்கி நடித்தும் இருக்கிறார் நேசம் முரளி. நடிகராக அவரிடம் ஒரு அசாத்திய எதார்த்தம் இருக்கிறது. இந்தக் கதைக்கேற்ற முகமும் குரலும் அவருக்கு கை கொடுக்கிறது.
ஒரு இயக்குநராக நேசம் முரளி இன்னும் தாண்ட வேண்டிய படிகள் நிறைய இருந்தாலும் அவர் வைத்திருக்கும் இந்த முதல்படி முக்கியமானது. சமூகத்தில் ப்ளாட்பாரத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வியல் துன்பத்தை கண்முன் வைத்த சமூக அக்கறை பாராட்டுக்குரியது.
மையக்கருவை மிகவும் அருமையாக கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் இடத்தில் தவறவிட்டிருக்கிறார். திரைக்கதையை காட்சியமைப்பதிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
ப்ளாட்பார வாழ்க்கை கஷ்டமானதுதான் என்றாலும், அந்த காட்சியையே திரும்ப திரும்ப காட்டியிருப்பது சற்று அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பின்னனி இசை ஓகே ரகம். நல்ல ஒரு மையக்கருவை எடுத்ததற்காக இயக்குனர் நேசம் முரளிக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம். லாபத்திற்காக படத்தினை எடுக்காமல், இந்த சமுதாயத்திற்கு ப்ளாட்பார வாழ்க்கையின் கஷ்டத்தை எடுத்துச் சென்றதற்காக ‘கபிலவஸ்துவை’ பாராட்டலாம்.
கபிலவஸ்து – கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..