
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கல்வியின் அவசியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், வி.டி.வி. கணேஷ், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை எம். சுகுமார் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், லால்குடி இளையராஜா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.
உலகம் முழுவதும் வரும் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படப்பிடிப்பு அனுபவங்களையும் படத்தின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
“மலைப்பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒரு சவால்” – காளி வெங்கட்
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ‘அருள்வான்’ படப்பிடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, ஒவ்வொருவரும் தங்களது டென்ட்டை சுமந்து கொண்டு தங்க வேண்டிய சூழல் இருந்தது. அந்த கடினமான சூழ்நிலையிலும் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் இந்த திரைப்படம் வெளியாகிய பிறகு கண்டிப்பாக அனைவராலும் பேசப்படும்’ என்றார்.
“இந்த படம் மனதுக்கு நெருக்கமான ஒன்று” – சக்தி வேலன்
சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்தி வேலன், ‘இது வெறும் வர்த்தக திரைப்படம் அல்ல. சமூகத்தில் இன்னும் கல்வி வசதி கிடைக்காத மக்களின் வாழ்க்கையை பேசும் முக்கியமான படம். இயக்குநர் கணேஷ் விநாயகனும், ஒளிப்பதிவாளர் சுகுமாரும் மீண்டும் இணைந்து, மலைகளின் இயற்கை அழகையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் அற்புதமாக பதிவு செய்துள்ளனர். இப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
“இந்த கதையை கேட்டவுடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” – ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன் கூறுகையில், ‘சில காலம் கிராமத்து கதைகளில் நடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் கூறிய கதையை முழுமையாக கேட்ட பிறகு இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று தோன்றியது. கல்வி கிடைக்காத ஒரு சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த கதை என்னை மிகவும் பாதித்தது. வரைபடத்திலேயே இல்லாத மலைப்பகுதிகளில், எந்த வசதிகளும் இல்லாமல் நடைபெற்ற படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது’ என்றார்.
“இது சாதாரண படம் அல்ல” – இயக்குநர் கணேஷ் விநாயகன்
இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், ‘இந்த படம் வலி, போராட்டம், நம்பிக்கை ஆகியவற்றின் கலவையாக இருக்கும். தயாரிப்பாளர் எஸ்.ஜி. சரவணன் தான் இந்த படத்தை பெரிதாக யோசித்து உருவாக்க ஊக்கம் அளித்தார். ஆரம்பத்தில் சிறிய படமாக தொடங்கிய திட்டம், பின்னர் பெரிய அளவில் வளர்ந்தது. ஜி.வி. பிரகாஷ் குமார், லாரன்ஸ் கிஷோர், சுகுமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர்’ என்றார்.
மேலும், ‘இந்த படத்தின் உண்மையான ஹீரோக்கள் அருள்நிதி, ஆரவ் மற்றும் பேபி கிருத்திகா. குறிப்பாக கிருத்திகாவின் நடிப்பு தேசிய விருது பெறும் அளவிற்கு இருக்கும். படப்பிடிப்பில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“கதை கேட்ட பிறகு கால்ஷீட் அதிகரித்துக் கொண்டே போனது” – அருள்நிதி
நடிகர் அருள்நிதி பேசுகையில், ‘முதலில் ஐந்து நாட்கள் மட்டுமே கால்ஷீட் வேண்டும் என்று இயக்குநர் கூறினார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அது 10, 15, 20 நாட்களாக மாறியது. கதையை கேட்டவுடன் இந்த படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குழந்தைகளின் கல்வி உரிமையை பேசும் இந்த படம் அனைவரின் மனதையும் தொடும்’ என்றார்.
“இந்த மாதிரி கதாபாத்திரம் மீண்டும் கிடைக்குமா தெரியாது” – ஆரவ்
நடிகர் ஆரவ் கூறுகையில், ‘இயக்குநர் கதை சொன்ன உடனே இது போன்ற கதாபாத்திரம் மீண்டும் கிடைக்குமா என்ற எண்ணம் வந்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். காளி வெங்கட்டுடன் இணைந்து நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. அவரது நடிப்பை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்’ என்றார்.
“முதல் படத்திலேயே பெரிய வாய்ப்பு” – பேபி கிருத்திகா
பேபி கிருத்திகா பேசுகையில், ‘திரைத்துறையில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. முதல் படத்திலேயே இத்தனை பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்த படத்திற்காக அனைவரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து உழைத்துள்ளனர். ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘அருள்வான்’
சமூகத்தில் கல்வி வசதி கிடைக்காமல் வாழும் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் போராட்டங்களையும் உணர்வுபூர்வமாக சொல்லும் திரைப்படமாக ‘அருள்வான்’ உருவாகியுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான காட்சிகளும், வலுவான கதைக்களமும், சிறந்த நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அருள்வான்’, கருத்துள்ள கமர்ஷியல் திரைப்படமாக ரசிகர்களின் மனதை வெல்லும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.





