
அறம் படம் மூலம் தனது இயக்கத் திறமையை உலக சினிமாவிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் இயக்குனர் கோபி நயினார்.
தற்போது ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து சமூக அக்கறை கொண்ட ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் பிஸியாக சென்று கொண்டிருக்கும் போதே அடுத்த படத்திற்கான வேலைகளையும் கையில் எடுத்துள்ளார் இயக்குனர் கோபி நயினார்.
தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக் இவரது இந்த படத்தின் கதை தான். அப்படி என்ன கதை என்று யோசிக்கிறீர்களா..??
வட இந்தியாவைச் சேர்ந்த பிர்ஸா முண்டாவின் கதை தான் அது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் மட்டும் இல்லாமல், பழங்குடி இன மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்.
25 வயது வரைக்குமே உயிரோடு வாழ்ந்த இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது உலகம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை இம்மண்ணில் இருந்து விரட்ட மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டியவர்.
இவரது கதையை மையமாக வைத்து தான் இயக்குனர் கோபி நயினார் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம்.
இந்தப் படத்தைப் பற்றி பேசிய கோபி, “பிர்சா முண்டா வடக்கு பகுதியில் நன்கு அறியப்பட்ட நபர். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அவர்களுக்கு எதிராக
பல செயல்களில் ஈடுபட்டவர்.
நான் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் முடித்துவிட்டேன், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை இது, மேலும் இது ஒரு பெரிய பட்ஜெட் படமாகவும் இருக்கும். ” என்றார்.
மேலும், சில தகவல்களை திரட்ட வட மாநிலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். உயர்ந்த நட்சத்திரத்திரம் ஒருவரை இப்படத்திற்காக பேசி வருகிறோம். ஜெய் நடித்து வரும் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும்” என்றார் இயக்குனர்.





