அறிமுக இயக்குனர் அரண் இயக்கத்தில் அரண், ஷாரிக் ஹாசன், ஆஷிக், அம்மு அபிராமி, பவித்ரா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இந்த ஜிகிரி தோஸ்து.
நாயகன் அரண் பொறியியல் கல்லூரி மாணவர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் ஷாரிக், ஆணிக். கல்லூரி புராஜக்ட்டுக்காக ‘போன் ரெக்கார்டிங் சாப்ட்வேர்’ ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அதன் மூலம் 500 மீ சுற்றளவில் பேசப்படும் தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்யலாம். ஆனால், கல்லூரியில் அதைச் செய்து காட்டும் போது தோல்வியடைகிறது.
பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து மகாபலிபுரம் செல்கிறார். அப்போது, ரெளடி ஒருவர் நாயகி பவித்ராவை கடத்திச் செல்வதை பார்க்கின்றனர் மூவரும். அந்த காரை பின் தொடர்ந்து செல்கிறார்கள்.
தனது டிவைஸ் மூலம் அந்த ரெளடி யாருடன் சேர்ந்து இதை செய்கிறார் என்பதை அறிகிறார்.
அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நல்லதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். திரைக்கதையில் வேகத்தை சற்று கொடுத்திருக்கலாம். ஆஷிக், அரண், ஷாரிக் மூவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.
அம்மு அபிராமி, பவித்ர லட்சுமி ஆகியோர் சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சிவம் மட்டும் அவருடைய கதாபாத்திரத்தில் கொஞ்சம் மிரட்டுகிறார்.
ஒரே இடத்தில் கதை இருப்பதால், அதில் இன்னும் கூடுதல் பரபரப்பை கொண்டு சென்றிருந்திருக்கலாம். இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு தூணாக நிற்கிறது.
நட்புகளோடு ஒருமுறை பார்க்கும்படியான கதையாக ஜிகிரி தோஸ்து அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.