சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் நேற்று பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் மு.க.ஸ்டாலின், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்காக சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் மதிமுக கட்சி கொடிகம்பங்கள் மற்றும் சிறிய அளவிலான பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. பதாகைகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடும் உத்தரவுகள் பிறப்பித்துள்ள நிலையில் மாநகராட்சி செயற்பொறியாளர் வரதராஜன், ஊழியர்கள் திவாகர் மற்றும் கண்ணன் ஆகியோர் அகற்றி உள்ளனர். அப்போது அங்கு வாகனத்தில் வந்த மதிமுக தொண்டர்கள் மாநகராட்சி அதிகாரி மற்றும் ஊழியர்களை தாக்கி உள்ளனர்.
இது சம்பவம் தொடர்பாக 171 வது வார்டு உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது 323- தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தாக்குதலில் ஈடுபட்ட சுப்ரமனியை போலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சுப்ரமணியை திருவெற்றியூரில் உள்ள மேஜிஸ்ட்ரேட் வீட்டில் ஆஜர்படுத்தியனர்.வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர் போலீசார்.