இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, பிரபு, பாக்யராஜ், சிதி இதானி, சிங்கம் புலி, விஜய் முருகன், ஆடுகளம் நரேன், விஜி சந்திரசேகர், அசுரன் தமிழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்”.
கதைப்படி,
நாயகியான சிதி இதானி, தனது அண்ணன் மகள்கள் மூன்று சிறுமிகளோடு வாழ்ந்து வருகிறார். பல ஏக்கர் சொத்துகள் சிதி இதானிக்கு இருக்கிறது. இந்த சொத்துகளை அபகரிக்க, சித்தி இதானியை திருமணம் செய்ய வேண்டும் என்று போட்டி போடுகிறது மதுசூதன் மற்றும் அவரது அண்ணன் வகையறா.
சிதி இதானிக்கும் மதுசூதன் வகையறாவுக்கும் ஒரு குடும்ப பந்தம் இருக்கிறது. அதை தியேட்டர்ல போய் தெரிஞ்சிக்கோங்க…
இந்த சூழலில், வழக்கு ஒன்றிற்காக ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை காண செல்கிறார் சித்தி இதானி. பின் அவரை பார்க்காமல் வந்துவிடுகிறார். இந்த செய்தியறிந்து, யார் தன்னை பார்க்க வந்தது என்றறிய ஜெயிலை விட்டு வெளியே வந்து சிதி இதானியை பார்க்க வருகிறார்.
அப்போது, அங்கு சிதி இதானியை சுற்றி நடக்கும் இன்னல்களை அறிந்துகொண்டு அவருக்கு உதவ எண்ணுகிறார். இந்நிலையில், ஆர்யாவிற்கு ஒரு ஃப்ளாஷ் பேக் செல்கிறது.
ஆர்யா யார்.? என்ற ப்ளாஷ் பேக் தான் அது… ஆர்யாவை வளர்த்து வருகிறார் பிரபு. பிரபுவின் பெயர் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். இவரது இந்த பெயரையே ஆர்யாவிற்கும் வைத்துள்ளனர்.
தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பிரபுவின் ஆதரவு வேண்டும் என்பதால், அவரை நாடுகின்றனர் ஆடுகளம் நரேன் வகையறா.. இவங்க ஒரு ரெளடி குரூப்…
பிரபு கொடுக்காத காரணத்தால் பிரபுவை அடித்து விடுகிறார் ஆடுகளம் நரேன். பதிலுக்கு ஆடுகளம் நரேனின் ஒரு கை மற்றும் ஒரு காலை வெட்டி விடுகிறார் ஆர்யா.
ஆடுகளம் நரேனின் மகன்கள் ஆர்யாவை கொல்ல நினைக்கிறார்கள்.
சிதியின் வில்லன்கள் ஆர்யாவை கொல்ல நினைக்கிறார்கள். இவர்களிடம் இருந்து ஆர்யா தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
மண்ணுக்கும் பொண்ணுக்கும் நடக்குற சண்டையாக படத்தினை இயக்கியிருக்கிறார் முத்தையா.
மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த படத்திற்கு ஆர்யா ஒரு நல்ல தேர்வு தான். தனக்கான அழகோடு, கருப்பு உடையோடு கம்பீரமான நடையோடு வீறு கொண்ட நடிப்பினை கொடுத்திருக்கிறார் ஆர்யா. சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
முதல் பாதி முழுவதும் சண்டைக் காட்சியிலேயே சென்று விடுகிறது. இதில் உறவு முறை சொல்லி சொல்லியே நமக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். நடிகர் பிரபு, ஆர்யா பிறப்பதற்கு முன்பும் அப்படிதான் இருக்கிறார், ஆர்யா பிறந்து வளர்ந்து திருமணம் முடியும் வரையும் அப்படியே இருக்கிறார். பிரபுவுக்கெல்லாம் வயசு ஆகாதா.?? தன்னை விட வயதில் சிறியவரான பாக்யராஜ்ஜை ஐயா என்று அழைக்கிறார்.
நாயகன் ஆர்யா, நாயகி சிதியை முதல் முறையாக பார்க்கும் போது எதுவும் தெரியாதவர்கள் போல அறிமுகம் ஆகின்றனர். ஆனால், ப்ளாஷ் பேக் காட்சியில் ஏற்கனவே இவர்கள் அறிமுகம் ஆனவர்கள் தான்.
பல ரெளடிகளை படத்திற்குள் கொண்டு வந்து, படத்தினை பார்ப்பவர்களுக்கு வெறுப்பை தான் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். எதற்கு இவ்ளோ பெரிய பெயர் என்று தெரியவில்லை. பிரபுவிற்கும் ஆர்யாவிற்கும் ஒரே பெயர் தான். அது தேவையில்லாத ஒன்று தான்.
படத்தில் நமக்கான ஒரே ஆறுதல் சிதி இதானி தான். தனக்கான நடிப்பை அழகோடு அளவோடும் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
முத்தையா படம் என்றாலே மண் சார்ந்த படம் தான் நமக்கான படம் தான் என்று நினைத்துச் செல்லும் சி செண்டர் ரசிகர்களுக்கு இது பெரிய தலைவலியை நிச்சயம் கொடுக்கும்.
ஜிவி பிரகாஷின் இசை எந்த இடத்திலும் ஒட்டவில்லை. ஏற்கனவே கேட்ட இசையைத் தான் இதிலும் பயன்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு சற்று ஆறுதல்..
மற்ற நடிகர்களின் நடிப்பை நடிப்பாக பார்த்தால் ரசிக்கலாம். ஆனால், அதுகதையோடு செல்லும்போது நம்மை பெரிதாக எந்த இடத்திலும் ஈர்க்கவில்லை என்பது தான் உண்மை.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் – அதிரடியாக இருக்கும் சண்டைக் காட்சியை காண ஒருமுறை செல்லலாம்.