
இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின், முனீஷ்காந்த், அருண், அகிலா, ஆஷிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கோபி துரைசாமி அவர்களின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “மறக்குமா நெஞ்சம்”…
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் சச்சின் வாரியர்.
படத்தின் தயாரிப்பாளர்கள்: ரகு எல்லூரு, ரமேஷ், ஜனார்தன் செளத்ரி, ராகோ யோகேந்திரன்..
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துணை நடிகராக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்தார் ரக்ஷன்.
முதல் முறையாக கதையின் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் ரக்ஷன்…
கதைக்குள் சென்று விடலாம்…

பள்ளி வாழ்க்கையை கடந்து கல்லூரி வாழ்க்கையைக் கடந்து அடுத்தகட்டமாக சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் நாயகனான ரக்ஷன். இவரும் தீனாவும் நண்பர்கள்.
பள்ளி காதலை கடந்து வந்த வாழ்க்கையை எண்ணி அவ்வப்போது ஃபீல் செய்கிறார் ரக்ஷன்.
இந்நிலையில், ரக்ஷன் படித்த கல்வியாண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்கிறது.
இதனால் மீண்டும் அந்த மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர்களின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலை வருகிறது.
இதனால், ரக்ஷன் உட்பட அவருடன் படித்த அனைவரும் பள்ளிக்கு மீண்டும் வருகிறார்கள். பள்ளியில் மூன்று மாத காலம் வகுப்பில் இருந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள்.
பள்ளிக்கு வந்த நேரத்தில், தனது ஒரு தலை காதலியான நாயகி மலீனாவை காண்கிறார்.
இந்த காலகட்டத்திலாவது தனது காதலை சொல்லியே ஆக வேண்டும் என்று முடிவெடுக்கிறார் ரக்ஷன்.
மீண்டும் பள்ளி வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர் இந்த நட்புகள். இந்த நேரத்தில் ரக்ஷன் தனது காதலி மலீனாவிடம் காதலை கூறினாரா.?? அந்த காதலை மலீனா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை

நாயகன் ரக்ஷன், கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார். இருவேறு காலகட்டத்தை மிக கச்சிதமாக கொடுத்து அதில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். ஆங்காங்கே சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், முதல் படத்திலேயே நிறைய காட்சிகளை நிறைவாகவே கொடுத்ததற்காக நாயகன் ரக்ஷனை வெகுவாகவே பாராட்டலாம்.
அழகு தேவதையாக காட்சியளித்திருந்தார் நாயகி மலீனா. நடிப்பிலும் முடிந்தவரை நன்றாகவே முயற்சித்து நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.
ப்ராங் ஸ்டார் ராகுலின் கதாபாத்திரம் படத்தில் மிகவும் வலுவானதாக கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வலுவை உணர்ந்து மிக கவனமாகவே அந்த கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார் ராகுல்.
தீனாவின் காமெடிகள் ஆங்காங்கே மட்டுமே ரசிக்க வைத்தது. மற்றபடி கதையில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத்தை அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
முனீஸ்காந்த் மற்றும் அகிலா இருவருக்குமான காதல் வாழ்க்கை ஒரு கவிதையாக பயணப்பட்டது படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.
பாடல்கள் மனதை வருடியது… பின்னணி இசையும் ஒகே தான்..
ரசிக்கும்படியான காட்சியை ஒளிப்பதிவில் கொடுத்த ஒளிப்பதிவாளர் கோபி துரைசாமிக்கு பாராட்டுகள்.
பள்ளி வாழ்க்கையை மீண்டும் நம் கண்முன்னே கொண்டு வந்ததற்கு இயக்குனருக்கு பெரும் பாராட்டுகள்… திரைக்கதையில் இன்னும் சற்று வேகத்தைக் கொண்டு வந்திருந்தால் மறக்குமா நெஞ்சம் நிச்சயம் தடம் பதித்திருக்கும்..
மறக்குமா நெஞ்சம் – நினைவுகளை தூண்டும்….





