Spotlightவிமர்சனங்கள்

மருத – விமர்சனம்

GRS இயக்கத்தில் ராதிகா சரத்குமார், பருத்திவீரன் சரவணன், விஜி சந்திரசேகர்,
GRS, லவ்லின் சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிக்க வெளிவந்துள்ள திரைப்படம் தான் “மருத”. மதுரை மாநகரை மருத என்றும் சிலர் அழைப்பதுண்டு. அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.

கதைப்படி,

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் ராதிகா சரத்குமார். இவருக்கு ஒரே மகன் GRS. ஊரில் ஊதாரித்தனமாக வளர்ந்து வருகிறார். ராதிகாவின் கணவர் மாரிமுத்து. ராதிகாவின் அண்ணன் சரவணன் செய்த செய்முறையை திருப்பி செய்ய முடியாமல் அவமானப்பட்டு தற்கொலை செய்து இறந்து விடுகிறார் மாரிமுத்து. இதனால், வறுமைக்கு தள்ளப்படுகிறார் ராதிகா.

பருத்திவீரன் சரவணனின் மனைவியாக வருபவர் விஜி சந்திரசேகர். ஊரில் உள்ள பலருக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வருபவர். கொடுத்த பணத்தை வட்டியோடு கொடுக்க தவறினால் அவர்களை கொடூரமான வார்த்தைகளால் கொண்டும், அவர்களை அடித்தும், அவமானப்படுத்தியும் பணத்தை பிடுங்கக் கூடிய கொடூர மனம் கொண்டவர் விஜி.

ராதிகாவின் மகனும் சரவணனின் மகளும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இந்த காதலை விஜி சந்திர சேகர் எதிர்க்கிறார். பல வருடங்களுக்கு முன் ராதிகாவிற்கு செய்த செய்முறையை வட்டியும் முதலுமாய் தனது மகளுக்கு செய்முறையாக செய்ய வேண்டும் என்று கூறுகிறார் விஜி சந்திரசேகர். செய்முறை செய்யத்தவறினால் ஊரார்களின் முன்னிலையில் அவமானப்படுத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார் விஜி.

தனது வறுமையில் அந்த செய்முறையை ராதிகா செய்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனரே நாயகனாக நடித்ததால், படப்பிடிப்பு தளத்தில் “இதெல்லாம் ஒரு நடிப்பா என யாரும் கூற முடியாதுதான். அதற்காக படம் பார்ப்பவர்களின் கதி.? அழகான கதாபாத்திரத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறார் நடிகர் GRS.

நாயகியாக லவ்லின் சந்திரசேகர் கதைக்கேற்ற நாயகியாக இருந்தாலும், இன்னும் ஒரு சில காட்சிகளில் எக்ஸ்ப்ரஷன் இன்னும் நன்றாகவே கொடுத்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றும் சொல்லலாம் அல்லது படத்திற்கு ஒரே ஒரு பலம் என்றும் சொல்லலாம் அது “ராதிகா சரத்குமார்” மட்டுமே. பல படங்களில் நடித்த, கற்றுக் கொண்ட தனது அனுபவ நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார். படத்தின் மிகப்பெரும் தூணாக நிற்பது இவரது நடிப்பு மட்டுமே.

வில்லியாக நடித்த விஜி சந்திரசேகர், தனது நடிப்பில் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார். இக்கதாபாத்திரத்திற்கு இவ்வளவும் ஆக்டிங்க் தேவையில்லை என்று தோன்றுகிறது., சற்று மீட்டரை குறைத்திருக்கலாம். பாவமான முகத்தைக் கொண்டு ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்கிறார் சரவணன்.

வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு இருவரின் கேரக்டர்கள் படத்தின் கதைக்கு ஒரு ஓரமாக வந்து செல்லும் கேரக்டர்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்சை ரமேஷ் B அவர்களின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். கிராமத்து காட்சியை மிக அழகாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

பாடலையோ மற்றும் பின்னனி இசையையோ ரசிக்கும் அளவிற்கு இசைஞானி இளையராஜா பெரிதான மெனக்கெடலை இப்படத்தில் கொடுக்கவில்லை.

Bigway Pictures நிறுவனம் சார்பில் சபாபதி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தென் தமிழகத்தில் பெரும் புழக்கத்தில் இருந்த செய்முறை பழக்கத்தின் கதையை, யாரும் தொடாத நிலையில், அதை கையில் எடுத்து சரியான முறையில், சரியான ஓட்டத்தோடு கொடுக்க தவறிவிட்டார் இயக்குனர்.

Facebook Comments

Related Articles

Back to top button