
கே எம் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உருவாகியுள்ளது ‘ஐரா’. இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் ‘மேகதூதம்’ என்ற பாடல் வெளியானது. இது இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பாடல் ஏன் ‘பவானியின் கீதம்’ என்று கூறப்படுகிறது என்பதை இயக்குனர் கே எம் சர்ஜூன் விளக்கும்போது, “இந்த பாடலை ஏற்கனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல். பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன்.
ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்து பார்க்க முடியாது. தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழை விட்டிருந்தார், அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது. பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
நயன்தாராவின் நடிப்பைப் பற்றி அவர் கூறும்போது, “இது அவரது 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானியின்’ கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
கலையரசன் மற்றும் யோகிபாபு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரியங்கா ரவீந்திரன் (கதை & திரைக்கதை), சுந்தரமூர்த்தி கே.எஸ். (இசை), சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), கார்த்திக் ஜோகேஷ் (எடிட்டிங்), சிவசங்கர் (கலை), மிராக்கிள் மைக்கேல் ராஜ் (ஸ்டண்ட்ஸ்), பிரீத்தி நெடுமாறன் (ஆடை வடிவமைப்பாளர்). விஜி சதீஷ் (நடனம்), தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக் (பாடல்கள்), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். நயன்தாராவின் ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.




