
இயக்கம்: அபின் ஹரிஹரன்
நடிகர்கள்: ஆதித்யா மாதவன், கெளரி கிஷன், அஞ்சு குரியன், ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர் செளந்தர்ராஜன், மாலா பார்வதி
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
இசை: ஜிப்ரான்
தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்
படத்தின் ஆரம்பத்தில் ஒருவர் இரவு நேரத்தில் சாலையில் கல் ஒன்றை போட்டு, வேன் ஒன்றை ப்ளான் செய்து கவிழ்த்து விபத்துக்குள்ளாக்குகிறார்.
அந்த வேன் வெடித்து சிதறி, அதில் இருந்தவர்கள் அனைவரும் தீக்கிறையாகிவிடுகின்றனர். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் உயரதிகாரி ஆதித்யா மாதவன். உடன் இன்ஸ்பெக்டர் அஞ்சு குரியனும் இருக்கிறார்.
இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும் ஆதித்யா, அந்த வேன் திட்டமிட்டே கவிழ்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவிழ்க்க வைத்தவரும் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் வேனை ஓட்டி வந்தவர் எங்கே என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டும் தனது விசாரணையைத் துவங்குகிறார்.
இந்த வழக்கு விசாரிக்கப்படும் அதே வேலையில், குழந்தை கருவுறுதல் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் கெளரி கிஷன்,மருத்துவமனையில் நடந்த ஒரு தில்லுமுல்லை கண்டுபிடிக்கிறார்.
இந்த மோசடியும் நாயகன் ஆதித்யா மாதவன் விசாரிக்கும் வழக்கும் ஒரு புள்ளியில் இணைகிறது. அது எப்படி என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்து முடித்திருக்கிறார். மிக வலுவான அக்கதாபாத்திரத்தை மிக எளிதாக தனது தோள் மீது சுமந்து சென்றிருக்கிறார் ஆதித்யா.
தனது பார்வை, விரைந்து பேசும் பேச்சு, ஆக்ஷன், காதல் ரொமான்ஸ் என பல முகங்களை கொண்டுவந்து காட்சிகளுக்கு நன்றாகவே உயிர் கொடுத்திருக்கிறார் ஆதித்யா. தமிழ் சினிமாவில் நிச்சயம் நல்லதொரு இடத்தை இவர் பிடிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆதித்யாவின் காதலியாக மட்டும் வந்து செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் ஒரு தூணாக வருகிறார் கெளரி கிஷன். காட்சிகளில் அழகாகவும், காட்சியை அளவாகவும் நகர்த்திச் சென்று தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் கெளரி கிஷன்.

போலீஸாக தனது கதாபாத்திரத்தை மிடுக்கென செய்து அதிரடி காட்டியிருக்கிறார் அஞ்சு குரியன். மேலும், படத்தில் நடித்த ஜெகன், முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர் செளந்தர்ராஜன், மாலா பார்வதி உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களை அளவாக நடித்து அசத்தியிருந்தார்கள்.
படம் தொடங்கிய நொடியே கதைக்குள் நகர்ந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம். அடுத்தடுத்த காட்சிகள், நம்மை படத்திற்குள் இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர்.
அசூர வேகத்தில் நகர்ந்த முதல் பாதியானது எந்த இடத்திலும் தொய்வடையாமல் தனது திரைக்கதையின் மூலம் கொண்டு சென்றது இயக்குனரின் திறமை தான்.
மேலும், இரண்டாம் பாதியில் கொலைகளுக்கான காரணத்தை இயக்குனர் வெளிப்படுத்தும் போது இயக்குனருக்கு சமூகத்தின் மீதான பார்வை எப்படியாக இருக்கிறது என்பது தெரியவரும் போது படம் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கிவிடுகிறார்.

படத்தின் மிகப்பெரும் பலமே, படத்தின் திரைக்கதை தான் என்பதை அடித்து கூறலாம். இப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன ஆவது என்று யோசித்து கூட பார்க்க முடியாத ஒரு கதையை கூறியிருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமல்லாமல், அப்படியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, மூன்றாம் பாலினத்தவரின் மேல் வைக்கப்படும் பார்வையானது சரியானதாக இருக்க வேண்டும் என்பதையும் கூறியது கைதட்டலுக்குறியது.
ஜிப்ரானின் இசையில் பின்னணி இசையானது படுவேகம் தான். பரபரவென செல்லும் திரைக்கதைக்கு இப்படியொரு வேகமெடுக்கும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் என்றே கூறலாம்.
படத்திற்கு ஏன் இந்த டைட்டில் என்பதற்கு இயக்குனர் படத்தில் வைத்த காட்சி – ”ஹேட்ஸ் ஆஃப் யூ சார்”
மொத்தத்தில்,
அதர்ஸ் – அல்டிமேட்..





