
இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் லிங்கா, கார்த்திக் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பரோல். TRIPR நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
வினோதினி வைத்தியநாதன், கல்பிகா கணேஷ் மற்றும் மோனிஷா முரளி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இரத்தம் தெறிக்க வெளியான ட்ரெய்லரைக் கண்டு படத்திற்கு சென்ற நமக்கு….
கதைப்படி,
நாயகன் லிங்கா மற்றும் கார்த்தி இருவரும் வட சென்னையில் வாழ்ந்து வரும் சகோதரர்கள். தந்தை தற்கொலை செய்து கொண்டதால் தாய் வளர்ப்பில் வளர்கின்றனர் இருவரும். அதிலும் மூத்த மகனான லிங்கா மீது தாய்க்கு அளவுகடந்த பாசம்.
இந்நிலையில், தாயை பற்றி தவறாக ஒருவன் பேசிவிட, கோபத்தில் அவரை தாக்கி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்று விடுகிறார் லிங்கா. அங்கு, அவருக்கு நடக்கும் கசப்பான சம்பவத்தால், அவரை மூன்று கொலை செய்யத் தூண்டுகிறது. சிறுவர் சீர்திருத்த பள்ளியிலேயே மூன்று கொலைகளை செய்ததால், சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்பட, பின் வெளியே வருகிறார் லிங்கா.
வெளியே வந்த பிறகும் கொலைகள் செய்து கொண்டே இருக்க, லிங்கா மீது ஆயுள் தண்டனை பாய்கிறது. மகன் மீது பாசம் கொண்ட தாய் இறந்து விட, அவருக்கு இறுதி சடங்கு செய்ய லிங்காவிற்கு பரோல் கேட்கிறார் அவரது தம்பி கார்த்திக்.
எப்போதும் மூத்த மகன் மீது பாசம் வைத்திருப்பதால் எப்போதும் தாய் மீது வெறுப்பும் அண்ணன் மீது கோபத்தோடும் இருந்து வருகிறார் தம்பி கார்த்தி.
இறுதியாக கார்த்திக் லிங்காவை தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வைத்தாரா .?
லிங்காவிற்கு பரோல் கிடைத்ததா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிகர் லிங்கா இதற்கு முன் பல படங்களில் நடித்தாலும், இதுவே இவருக்கான முத்திரை என்று கூறலாம். கரிகாலனாக அக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக பொருந்தியிருக்கிறார் லிங்கா. கோபம், ஆக்ரோஷம் என இரண்டையும் மிகவும் நேர்த்தியாக கொடுத்து காட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார் லிங்கா. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த வித குறையும் இல்லாமல் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
பீச்சாங்கை படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருந்த கார்த்திக் இப்படத்திலும் தனது நடிப்பாற்றலை காட்டியிருக்கிறார். இருந்தாலும், ஒரு சில இடங்களில் எட்டிப் பார்த்த ஓவர் ஆக்டிங்கை கார்த்திக் தவிர்த்திருக்கலாம்.
நாயகிகளான கல்ப்பிக்கா மற்றும் மோனிஷா முரளியின் நடிப்பு ஓகே என்றாலும் கொலைகள் பல செய்து வரும் கொலைகாரனை பெண்கள் எப்படி காதலிப்பார்கள்.?
கேள்விகள் சில எழும்பினாலும், தமிழ் சினிமாவில் இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சியாக வந்து சென்றிருக்கிறது பரோல்.
நடிகர்களை மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுத்து அவர்களை திறமையாக நடிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆபாச வார்த்தைகளை தவிர்த்திருந்திருக்கலாம். பரோல் பெற என்னென்ன நடைமுறைகள் உள்ளது என்பதை சற்று வெளிப்படுத்தியதற்காக இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம்.
படத்திற்கு பலம் என்றால் அது ஒளிப்பதிவு தான்.. மகேஷ் திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மை கட்டிப்போடுகின்றன.
ராஜ்குமார் அமல் அவர்களின் இசையில், பாடல்கள் ஓகே ரகம் தான். ஆனாலும், தாய் இறந்து கிடக்கும் சமயத்தில் வரும் பாடலை வேறு விதமாக கொடுத்திருக்கலாம்.
பரோல் – தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி.. பக்கா





