பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களின் 80-வது அகவை தினத்தையொட்டி பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர் பாமக நிர்வாகிகள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில், ராமதாஸ் அவர்களின் 80-வது அகவை தினத்தை முத்துவிழா பொதுக்கூட்டமாக நிர்வாகிகள் கொண்டாடினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
வந்திருந்த மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசிய தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் வி ரமேஷ் அவர்கள், ‘ எங்களை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அண்ணன் பரமகுரு அவர்களை வரவேற்கிறோம். இந்நாள் விழா நம் அய்யாவிற்கான முத்துவிழா. அதுமட்டுமல்லாமல், நமது முத்துநகரில் நடக்கும் முத்தான விழா. அய்யாவின் முத்துவிழாவை கொண்டாடுவதில் நம் அனைவரும் பெருமை கொள்வோம்.
திராவிட கருமேகங்கள் சூழ்ந்திருந்த காலக்கட்டத்தில் தமிழினத்தை காக்க, தமிழின உரிமையை மீட்க தோன்றிய தலைமகன் அய்யா மருத்துவர் அவர்கள் தான். 1987ல் பல இனத்திற்காக அய்யா நடத்திய இட ஒதுக்கீட்டு போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத, யாரும் அழிக்க முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.
அந்த போராட்டத்தின் வெற்றியாக 20% சதவீத இடஒதுக்கீட்டினை அய்யா மருத்துவர் பெற்றுத் தந்தார். பின், 1989ல் அனைத்து சமுதாய மக்களுக்கும் நலன் காத்திட பாட்டாளி மக்கள் கட்சி என்ற ஒன்றை துவங்கினார்.
அய்யா, ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை என்றாலும் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை, வெளியிடும் ஒரே தலைவரை கொண்ட கட்சி பாமக தான்.
நமது பாமக-வின் நிதிநிலை அறிக்கை வைத்தே சில ஆட்சியாளர்களின் ஆட்சியே நடந்து வருகிறது. இதுவே நிதர்சனம். மக்கள் பிரச்சனை எதுவாகினும் முதல் குரல் ஒலிப்பது நமது அய்யாவின் குரல் தான். குரலோடு விட்டுவிடாமல், அந்த பிரச்சனைக்கு தீர்வையும் காண்பார். இதுவே அய்யாவின் குணம்.’ என்று வாழ்த்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பரமகுரு அவர்கள், ‘ அய்யாவின் 80-வது அகவை தினத்தை கொண்டாடுவதில் நம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். இது போன்ற ஒரு தலைவரை எந்த கட்சியும் கொண்டதும் இல்லை, கண்டதும் இல்லை.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஒரே தலைவர் நம் அய்யா அவர்கள் மட்டும் தான். ஆட்சி யார் நடத்தினாலும், அந்த ஆட்சி கண்டு நடுங்கக்கூடிய ஒரே தலைவர் நம் அய்யா அவர்கள் தான்.’ என்று கூறினார்.
மேலும், அய்யா அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.