
தமிழ் படம் 1, தமிழ் படம் 2 படங்களை இயக்கிய இயக்குனர் தான் சி எஸ் அமுதன். இவரது இயக்கத்தில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் படம் “ரத்தம்”. முதல் இரு படங்கள் முழுக்க முழுக்க காமெடி ஜார்னரில் இயக்கிய சி எஸ் அமுதன், ரத்தம் படத்தை முழு சீரியஸ் படமாக இயக்கியிருக்கிறார்.
கதைப்படி,
மனைவியை இழந்த விஜய் ஆண்டனி தனது 6வயதுமகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். முகம் முழுவதும் தாடி வளர்த்து, தனக்கு தன் மகளை விட்டால் வேறு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே வாழ்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இந்தியாவின் இன்வஸ்டிகேடிவ் பத்திரிகையாளர்களில் மிக முக்கியமான நபராக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி.
சென்னையில் மிகவும் பிரபலமான பத்திரிகையாக வருவது “வானம்” பத்திரிகை. இதன் ஓனராக இருப்பவர் நிழல்கள் ரவி. இவரது மகன் வானம் பத்திரிகையின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஒருநாள் இரவு இளைஞர் ஒருவர் நிழல்கள் ரவியின் மகனை வானம் அலுவலகத்தில் வைத்து கத்தியால் குத்திகொலை செய்து விடுகிறார்.

நிழல்கள் ரவியின் மகனும் விஜய் ஆண்டனியும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். நிழல்கள் ரவி மகன் இருந்த இடத்தில் நீ தான் இருக்க வேண்டும். நீயும் உன் மகளும் சென்னைக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்கிறார்.
விஜய் ஆண்டனியும் அவரது மகளும் சென்னை வருகின்றனர். சாதாரண ஒருவராக அந்த பத்திரிகையில் பணிபுரிகிறார். இந்த பத்திரிகையின் மூத்த எடிட்டராக வருகிறார் நந்திதா.
இந்த நேரத்தில் கலெக்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். இதனால் சந்தேகிக்கும் விஜய் ஆண்டனி, நண்பன் கொலை செய்யப்பட்டதற்கும், கலெக்டர் கொல்லப்பட்டதற்கும் பின்னால் ஏதோ ஒரு டீம் வேலை செய்திருக்கிறது என்பதை உணர்கிறார் விஜய் ஆண்டனி.
அதை நோக்கி பயணிக்கும் விஜய் ஆண்டனிக்கு என்ன கிடைத்தது.? இந்த கொலைகளுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் யார்.?? என்பதை விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதே படத்தின் மீதிக் கதை.
மற்ற படங்களைக் காட்டிலும் விஜய் ஆண்டனி இந்த படத்தில் மிகவும் தேர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் என்றே கூறலாம். தன் மனைவியை இழந்த துக்கத்தில் வாழ்க்கையை வெறுத்து வாழும் வாழ்க்கையாக இருக்கட்டும், தன் நண்பனுக்காக மீண்டும் தன் பணியில் சேர்ந்து ஆடும் ஒரு ஆட்டமாக இருக்கட்டும், இரண்டிலும் தன் முத்திரை நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

அலுவலகத்தில் நடக்கும் சண்டைக் காட்சி, ஹீரோயிசமாக இல்லாமல் யதார்த்தமாக இருந்தது நலம். நந்திதா ஸ்வேதா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து தனக்கான பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
ரம்யா நம்பிசனும் தனக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு எடுத்து நடித்திருக்கிறார். மஹிமா நம்பியாரின் கதாபாத்திரம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அவ்வளவு வலுவான கேரக்டரை தன் கண் பார்வையில் மிரட்டியெடுத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இதற்கு மேல், இந்த கேரக்டரை பெரிதாக விரிவுபடுத்தி கூற இயலாது.
கதையின் போக்கை யாரும் எளிதில் யூகிக்க முடியா வண்ணம் மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சி எஸ் அமுதன். அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்ற பார்வையிலேயே நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் இறுதிவரை நம் கண்களை திரையை விட்டு விலகாதவாறு திரைக்குள் கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர். ஒரு பத்திரிகையாளனாக இருந்தால், பல கோணங்களில் தனது பார்வையை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இன்வஸ்டிகேஷனை நடத்தி அதில் வென்றும் காட்டியிருக்கிறார் இயக்குனர்.
கண்ணன் நாராயணனின் பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் யூனிக்கான இசையை கொடுத்திருந்தாலும், ஒரு சில இடங்களில் ஒரு சில படங்களின் பின்னணி இசை எட்டிப் பார்த்துச் செல்வதை காண முடிந்தது.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நச். நிழல்கள் ரவியின் மகன் கொலை காட்சியில் மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவை கொடுத்திருந்தார். விஜய் ஆண்டனியின் குதிரை ஸ்டண்ட் காட்சிகளும் ரசிக்கும் படியாக இருந்தது.
ரத்தம் – ஒரு “Neat” இன்வஸ்டிகேஷன் திரைப்படம்… Must watch




