Spotlightசினிமா

இசை பிரியர்களை ஈர்க்கும் இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் புதிய இசை ஆல்பம்!

கொரோனா ஊரடங்கினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மக்களின் மனங்களில் புதிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான புதிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. “காதலை காதலிப்போம்…” என்று தொடங்கும் இந்த பாடலை ‘ஓட்டம்’ படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளருமான எஸ்.பிரதீப் வர்மாவும், இயக்குநர் எம்.முருகனும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.

தனி இசை ஆல்பங்களின் வருகை தமிழ் இசைத்துறையில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இயக்குநர் எம்.முருகனின் காதல் கவிதைக்கு, ஈர்ப்பான மெட்டமைத்த எஸ்.பிரதீப் வர்மா, தனது குரல் மூலம் இசை பிரியர்கள் ரசிக்கும் இனிமையான பாடலாகவும் கொடுத்திருக்கிறார்.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மா கூறுகையில், “நான் நிறைய கன்னடப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். தமிழிலும் ஏற்கெனவே இசை ஆல்பம் வெளியிட்டுருக்கிறேன்.
காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நல்ல தமிழ் கவிதையை பயன்படுத்தி இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என வெகு நாளாக விருப்பம் இருந்தது. அது இந்த இசை ஆல்பத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது.
இயக்குநர் எம்.முருகன் எழுதிய காதல் கவிதை அதற்கு துணையாக இருந்தது.
விரைவில் வெளிவர இருக்கும் ’ஓட்டம்’ திரைப்படத்தின் மூலம்
எனது தமிழ் திரைப்படப் பாடல்களும் ரசிகர்களின் செவிகளுக்கு விருந்தாக அமையும் என நம்புகிறேன்.
தமிழ் சினிமா என்னும் மகா சமுத்திரத்தில், நானும் ஒரு துளியாக இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.” என்றார்.

இசையமைப்பாளர் எஸ்.பிரதீப் வர்மாவின் யூடியூப் தளத்தில் வெளியாகியிருக்கும் இப்பாடல், சாவன், விங், கானா உள்ளிட்ட பல இசைத்தளங்களிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button