
அன்று ரஜினி கொடுத்த குரலால், 1996 மற்றும் 1998ல் நடந்த, சட்டசபை, லோக்சபா தேர்தலில், தி.மு.க., – மூப்பனார் தலைமையிலான, த.மா.கா., கூட்டணி கட்சிகள், பெரும் வெற்றி பெற்றன.அந்த ஆண்டே, ரஜினி, அரசியல் களம் கண்டு இருந்தால், இன்று, அவர் ஒரு அசைக்க முடியாத, அரசியல்வாதியாகி இருப்பார்.
மறைந்த மூத்த தலைவர், மூப்பனார், அரசியலுக்கு ரஜினியை இழுக்க பெரும் முயற்சி எடுத்தார்; அது எடுபடாமல் போனது. அதன் பின் நடந்த, பல தேர்தல்களின் போதும், ரஜினி அரசியலுக்கு வருவாரா, வர மாட்டாரா என்ற பட்டிமன்றம் தான் நடந்தது; ஆனால், அவர் வந்தபாடில்லை!’முன்னாள் முதல்வர்கள், ஜெயலலிதா, கருணாநிதி மறைவால், தமிழக அரசியலில், மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தியாவது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ என, அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப, ரஜினி, ‘தமிழகத்தில், சிஸ்டம் கெட்டு விட்டது; போர் என்று வரும்போது, களம் காண்போம்’ எனக் கூறி, தன் ரசிகர்களை உசுப்பேற்றினார். புதிய கட்சியை பலப்படுத்த, மாவட்டம் தோறும், உறுப்பினர்களை சேர்க்க திட்டம் போட்டு, படுவேகத்தில் செயல்பட்டு வந்தார்.
ஒரு கோடி உறுப்பினர்களை இலக்கு வைத்து, அவர் ரசிகர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அடுத்தடுத்து, காலா, 2.0, பேட்ட போன்ற படங்களில் நடித்தார். படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வெற்றி பெற்றன. ‘என்னுடைய இலக்கு, 2021 தமிழக சட்டசபை தேர்தல் தான்’ எனக் கூறிய ரஜினி, ‘அதுவரை யாருக்கும் ஆதரவு இல்லை’ எனக் கூறி விட்டார்.அவரை நம்பிய ரசிகர்கள், ‘தலைவர், மீண்டும் நமக்கு, ‘அல்வா’ கொடுத்து விட்டாரே…’ என நொந்து நுாலாகி விட்டனர்.
இப்போது பதுங்கியுள்ள ரஜினி, அரசியலில், புலியாக, 2021ல் பாய, பல காரணங்கள் இருக்கின்றன என்பதை, ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில், அ.தி.மு.க., – தி.மு.க., தலைமையிலான, லோக்சபா கூட்டணிகள் உருவாகி விட்டன. அதில், நேற்று வரை திட்டி தீர்த்த, பா.ம.க., இன்று, அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து உள்ளது. அதே போல், கருணாநிதியை கடுமையாக எதிர்த்த, வைகோ, தி.மு.க.,விடம் ஒரு, ‘சீட்’டிற்காக காலில் விழுந்துள்ளார்.இப்படி சூடு, சொரணை இல்லாத, அரசியல் கட்சிகள் மீது, மக்களுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இது, மேலும் அதிகமாகி, அனைத்து கட்சிகளையும் ஒதுக்கும் காலம் நிச்சயம் உண்டு. அப்போது, ரஜினி, மக்களிடையே அசைக்க முடியாத சக்தியாக மிளிர்வார்.





