
பெற்றோர்கள்தான் ஒரு குழந்தை நல்லவனாக வளர்வதற்கும் தவறான பாதையில் செல்வதற்கும் காரணம் எனும் கருத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது அரளி.
சினிமாவில் எப்போதும் மகன் நடிப்பதற்கு ஆசைப்பட்டால் தந்தைதான், கடன் வாங்கியேனும் படம் தயாரிப்பார் ஆனால் இந்த அரளி பட இயக்குனர் சுப்பாராஜோ சற்று வித்தியாசமானவர் தந்தையின் நிறைவேறாத சினிமா கனவை நிறைவேற்ற தனது தந்தையை கதையின் நாயகனாக வைத்து படம் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக மதுசூதனும், நாயகியாக மஞ்சுளாவும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரின் தந்தை அண்ணாமலை மற்றும் இயக்குனர் சுப்பாராஜும் நடித்துள்ளார். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு எம்.எஸ்.ஜான் மற்றும் அனில் முத்துக்குமார் இசையமைத்துள்ளார். விசாகன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
படம் பழிவாங்கும் த்ரில்லராக உருவாகி இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்த ராதாரவி, எஸ்.பி.முத்துராமன், நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறும்போது, “எப்போதுமே நான் இப்படிப்பட்ட படங்களை பார்க்கும்போது பேப்பரும் பேனாவும் கையில் வைத்துக்கொண்டு அதில் உள்ள குறைநிறைகளை சொல்வதற்காக அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொள்வேன். ஆனால் அரளி படம் பார்த்தபோது என்னால் கடைசிவரை குறிப்பெடுக்க முடியவில்லை. காரணம் படம் அவ்வளவு வேகத்தில் செல்கிறது” என்றார்.
நடிகர் நாசர் படத்தை பற்றி சிலாகித்து கூறியதாவது, “இந்தப்படத்தின் மையக்கதை இதுவரை தமிழ்சினிமாவில் பார்த்திராத ஒன்று என சொல்லலாம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தில் மைய கதாபாத்திரமாக குழந்தைகள் நல காப்பாளராக நடித்துள்ள அருணாச்சலத்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இடைவேளைக்குப்பின் கதை எப்படி போகும் என்பதை அனுமானிக்கவே முடியவில்லை” என்றார்.
நடிகர் ராதாரவி படத்தை பற்றி பாராட்டி கூறும்போது, “திருக்குறளில் இரண்டு அடியில் விஷயத்தை சுருக்கமாக சொல்வது போல இந்தப்படத்தில் கதையை சொல்லியிருக்கிறார்கள். கதை நம்மை கலங்க வைக்குது…மது நன்றாக நடித்துள்ளார். வயதான கேரக்டரில் நடித்துள்ளவரின் நடிப்பை பார்த்து கண்கலங்கிட்டேன்.. என்னா நடிப்பு.? தமிழ்சினிமாவுலகை காப்பாற்றவேண்டும் என்றால் இதுமாதிரி படங்கள் வெளிவர்றதுக்கு நாம துணையா நிக்கணும்” என்கிறார்.
இயக்குனர் பாலாஜி தரணீதரன் கூறும்போது, “அரளிங்கிற டைட்டிலுக்கு ஏற்றமாதிரி சரியான அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.. பின்னணியில் ஒரு வலுவான கதையை எடுத்துக்கொண்டு அதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்” என்றார்.
இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதி, “இந்தப்படத்தில் ‘பிகாலே’ அதாவது ஆன் விபச்சாரம் என்கிற புது விஷயத்தை கூறியுள்ளார்கள்.. நம் கலாச்சாரத்துக்கு புதுசு என்றாலும் அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு ஏழை பட்டதாரி வாலிபன் எப்படி இதில் சிக்கி மீள்கிறான் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறார்க” என பாராட்டியுள்ளார்.
நடிகர் கரிகாலன் கூறும்போது, “மகனுக்காக படம் எடுக்க சினிமாவுக்குள் வரும் அப்பாக்களை பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சுப்பாராஜ், தனது தந்தைக்காக படம் எடுக்கவந்து, அவரையே மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார் என்பது தமிழ்சினிமாவுக்கு புதிய முயற்சி” என்றார்.
நடிகர் அழகு கூறும்போது, “பொது ஒரு படத்தை பார்க்கும்போது க்ளைமாக்ஸ் நெருங்குபோதுதான் விறுவிறுப்பு கூடும்.. ஆனா இந்தப்படத்தில் இடைவேளையில் இருந்தே நம்மளை அப்படியே தூக்கிட்டு போகுது” என பாராட்டியுள்ளார்.