டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு 36 இடங்கள் தேவை என்கிற நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி புதுடெல்லியில் 3வது முறையாக ஆட்சியமைக்கும் வகையில் அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பதால் அக்கட்சியினர் தலைநகரில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது முறையாக தலைநகரில் ஆட்சியை பிடிக்க உள்ளதால், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். டெல்லி முழுக்க பல இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. முன்னிலை நிலவரம் மாறினாலும், ஆம் ஆத்மி சராசரியாக 55 முதல் 60 இடங்கள் வரையில் வெல்லும் என்கிறார்கள். அதனால், தொண்டர்கள் இப்போதே தங்களது வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். இனிப்புகள், பட்டாசுகள் என்று தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாட துவங்கிய நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தொண்டர்களுக்கு திடீர் கண்டிஷன் போட்டுள்ளார்.
டெல்லி மாசுபாட்டை கருத்தில் கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும், டெல்லியில் எந்தப் பகுதியிலுமே பட்டாசுகளை யாரும் வெடிக்க கூடாது என்றும், தொண்டர்கள் அமைதியான முறையில் வெற்றியை கொண்டாட வேண்டும் என்று தன் கட்சித் தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார் கெஜ்ரிவால்.