
இயக்குனர் ஷான் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை நாயகி.
காமெடி நடிகராக மட்டுமே சினிமாவில் வலம் வந்த யோகிபாபு, முதல் முறையாக தந்தையாக கதையின் நாயகனாகவும் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் இப்படத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் யோகி பாபு.
கதைப்படி,
கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. குழந்தையின் பெயர் பொம்மை நாயகி. 9 வயது சிறுமியான பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். ஊர்க்காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட சமூக ஆர்வலர்கள் சிலரால் நீதிமன்றத்தை நாடுகிறார் யோகிபாபு. குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது . ஆனால் அதையும் மீறி யோகிபாவுக்கு பிரச்சினை வருகிறது. வேலு அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? பிரச்சினையில் இருந்து விடுபட வேலு எடுத்த முடிவு என்ன என்பதே பொம்மை நாயகி.
வேலுவாக யோகி பாபு, தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் எங்குமே அவர் சிரிக்கவில்லை. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார். சீரியஸான கதை என்பதால் எல்லா இடங்களிலும் அழுது வடியாமல் இருப்பது நன்று. யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான பிணைப்பு திரையில் ரசிக்க வைக்கிறது. அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குனர். சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். படத்தில் வரும் வசனங்கள் கள யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற, தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார் போன்ற வசனங்கள் அருமை. உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையும் இயக்குனர் பதிவு செய்துள்ளார். பா.ரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு போகலாம் என்பதை பொம்மை நாயகியும் உறுதி செய்துள்ளது.
யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், நடித்திருக்கிறார்கள் , யோகிபாபுவின் மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி என அனைவரின் நடிப்பும் அருமை.
கதாபாத்திரங்களின் தேர்வை மிகவும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். அவர்களின் தேர்ந்தெடுத்த நடிப்பும் அவ்வளவு அருமை.
தீர்ப்பை மட்டும் சற்று வித்தியாசமான பாணியில் கொடுத்திருந்தால், மற்ற கதைகளின் இயக்குனரிடத்தில் இருந்து இயக்குனர் ஷான் தனித்து நின்றிருந்திருப்பார்.
இருந்தாலும், பொம்மை நாயகியின் உயிரோட்டமான நடிப்பை ஒரு முறை திரையில் கண்டு வரலாம்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ஷான்.
ஒளிப்பதிவு -அதிசயராஜ்,
இசை – சுந்தரமூர்த்தி
எடிட்டிங் – செல்வா RK
கலை- ஜெயரகு
பாடல்கள் , கபிலன், அறிவு , லோகன், சித்தன் ஜெயமூர்த்தி,
சவுண்ட் – அந்தோனி ஜே ரூபன்.
சண்டைபயிற்சி – ஸ்டன்னர் சாம்.
உடைகள் – ஏகாம்பரம்.
தயாரிப்பு நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித். மற்றும்
யாழி பிலிம்ஸ் மனோஜ் லியோனல் ஜேசன்.
இணை தயாரிப்பு.
வேலன், லெமுவேல்