உலகம் முழுவதும் கொரோனாவால் நாளுக்கு நாள் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
50 வயதுக்கு மேற்பட்ட பலர் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர் மதன கோபாலுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் கணவருக்கு கொரோனா எனத் தெரிந்ததும் 66 வயதான அவரது மனைவி லலிதா அவரை விட்டுப் பிரியாமல் ”யோவ்… உன்ன விட்டு நான் என்னைக்கு பிரிஞ்சி இருந்திருக்கேன்” என்று கூறிக்கொண்டு மருத்துவரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே கணவருடன் 10 நாட்கள் இருந்து கணவரைக் கவனித்துக் கொண்டார்.
மூதாட்டி லலிதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 10 நாட்கள் சிகிச்சை முடிந்து முதியவர் பூரண குணமடைந்து வீட்டுக்குச் சென்றது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வயதிலும் அசர வைத்த இவர்களின் காதல் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.