
நடிகை துஷாரா விஜயன், ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அருள்நிதிக்கு ஜோடியாக கழுவேத்தி மூர்க்கன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இன்று திரையரங்கில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் அணியுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை துஷாரா விஜயன் கூறும்போது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம். திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் கொடுத்துள்ளார்” என்றார்.
அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் ‘ராட்சசி’ புகழ்) எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு மற்றும் இசை டி.இமான். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யுகபாரதி (பாடல் வரிகள்), நாகூரன் (எடிட்டர்), மகேந்திரா (கலை இயக்குநர்), தினா (நடன இயக்குநர்), கணேஷ் (ஸ்டன்ட்), அன்பு (ஸ்டில்ஸ்), சுபீர். ஆர் (ஆடைகள்) மற்றும் பாலகுமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்).