
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.
அதுமட்டுமில்லாமல், கார்த்தி நடித்து வெளிவந்த படங்களிலே இந்த படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.
இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இப்படத்தை ஹிந்திக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால், இப்படத்தை ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், இதன் பணிகள் முடிந்ததும் ஹிந்தி ‘கைதி’க்கான படப்பிடிப்பில் அவர் இறங்குவார் என தெரிகிறது. ஒரு முன்னனி நடிகர் தான் ஹிந்தியில் நடிக்கவிருக்கிறார் என்றும் தெரிகிறது.





