மீடூ பிரச்சினை இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்டது அதை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள் என்று சினிமா விழாவில் கரு.பழனியப்பன் பேசினார்.
அக்கூஸ் புரொடக்ஷன் சார்பில் பி.டி. சையது முகமது தயாரித்துள்ள படம்’ ராஜாவுக்கு ராஜா’ .ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ் , கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது ” இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார். இவ்விழாவுக்கு அழைத்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.
இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ,எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான்
பார்க்கிறார்கள்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர் ,திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள் ” இவ்வாறு கரு.பழனியப்பன் பேசினார்.