
இயக்கம்: சண்முக ப்ரியன்
நடிகர்கள்: விக்ரம்பிரபு, சுஷ்மிதா, மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ்
ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர்
இசை – ஷான் ரோல்டன்
படத்தொகுப்பு – பரத் விக்ரமன்
தயாரிப்பு நிறுவனம்: ASSURE FILMS & RISE EAST
தயாரிப்பாளர்கள்: DR. SWETHA SHRI & SREENIDHI SAGAR
உசிலம்பட்டியில் 30 வயதைக் கடந்த விக்ரம் பிரபுவிற்கு திருமணம் ஆகவில்லை. சுற்றியிருக்கும் சொந்த பந்தம் அனைவரும் எப்போ கல்யாணம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவழியாக கோபி செட்டிபாளையத்தில் ஒரு பெண் அமைய, அங்கு நிச்சயதார்த்தம் செய்வதற்காக விக்ரம் பிரபு தனது குடும்பத்தோடு அங்கு செல்கிறார்.
இவரது அப்பாவாக கஜராஜ் வருகிறார். மாமாவாக அருள்தாஸும் நண்பனாக ரமேஷ் திலக்கும் வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையத்தில் சுஷ்மிதாவை கண்டதும் விக்ரம் பிரபுவிற்கு பிடித்து போக, உடனே திருமணத்திற்கு ஓகே சொல்லிவிடுகிறார் விக்ரம்பிரபு.
நிச்சயத்தினை முடித்து ஊருக்கு கிளம்பும் சமயத்தில் கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. இதனால், பெண் வீட்டிலேயே விக்ரம் பிரபுவின் குடும்பத்தாரும் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது.
கையோடு திருமணத்தையும் அங்கேயே நடத்திவிட இருவீட்டார்களும் முடிவெடுக்க, விக்ரம் பிரபுவும் ஓகே சொல்லி விடுகிறார்.
அன்று, இரவோடு இரவாக சுஷ்மிதா வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்து விடுகிறார். என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார் விக்ரம் பிரபு.
இறுதியாக, விக்ரம் பிரபுவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் பிரதிபலிப்பாக தென்பட்டார் நாயகன் விக்ரம் பிரபு. பெண்களிடம் பேசும் போது ஏற்படும் கூச்சம், தனக்கு திருமணம் ஆகப் போகிறதே என்ற மனதுற்குள் ஏற்படும் சந்தோஷம் என ஒருஅக்மார்க் திருமணமாகாத 90’ஸ் கிட்ஸ் இளைஞனை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

அமைதியான ஒரு தேவதையாக காட்சியளித்திருந்தார் சுஷ்மிதா. இவருக்கு அப்படியே நேர்மாறாக தனது கதாபாத்திரத்தை துள்ளி குதித்து செய்திருக்கிறார் மீனாட்சி.
ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் தனது கேரக்டரை ஸ்டெடியாக செய்து முடித்திருந்தார் அருள்தாஸ். காமெடியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருந்தார் ரமேஷ் திலக்.
சுற்றியிருக்கும் சுற்றங்களால் திருமணத்திற்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படும் ஒரு இளைஞனின் தவிப்பு தான் இந்த லவ் மேரேஜ்.
தன் அக்காவை பெண் பார்க்க வந்திருக்கிறார் என்று தெரிந்தும், எப்படி ஒரு பெண் முத்தம் கொடுக்கவில்லையா.? என்று கேட்பார்..
தான் செய்த தவறுக்கு விக்ரம்பிரபுவிடம் மீனாட்சி மன்னிப்பு எதும் கேட்கவில்லை…?? கட்சி தலைவராக வருகிறாராம் சத்யராஜ். அவர் ஊரை விட்டு செல்லக் கூடாது என்று விக்ரம் பிரபுவிற்கு ஆர்டர் போடுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான காட்சி.??

இப்படியாக கதையில் ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகள் எட்டிப் பார்க்கின்றன. இருந்தாலும், 90’ஸ் கிட்ஸின் திருமணம் குறித்த மனக்குமுறலை விக்ரம் பிரபு க்ளைமாக்சில் பேசியதற்காகவே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.
விக்ரம் பிரபு குடித்துவிட்டு அருள்தாஸிடம் பேசும் காட்சி தரமான ரகம்… காமெடியோடு சிந்திக்க வைக்கும் காட்சிகளையும் வைத்து நம்மையும் சிந்திக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஷான் ரோல்டனின் இசையில் ஒரு பாடல் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை ஓகே ரகமாக கடந்து செல்கிறது.
அழகூற கிராமப்புற காட்சியையும் ஒரு அழகிய வீட்டையும் மிகவும் ரம்மியமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
லவ் மேரேஜ் – குடும்பத்தோடு ரசிக்கலாம்..




