Spotlightசினிமா

Never Escape Movie Review 3/5

Stranger Things வெப் சீரிஸ் போன்று தமிழில் வந்த வித்தியாசமான திரைப்படம் Never Escape. நாம் அனைவரும் கேள்விப்பட்ட ஒரு விஷயம் நம் உலகத்திலேயே பாதாள உலகம் உள்ளது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. ஒரு சில அதிதீவிர உணர்வு கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும். இதை மட்டுமே கருவாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் Never Escape திரைப்படம்.

ஒரு விபத்தில் போலீஸிடமிருந்து திரையரங்கிற்குள் பதுங்கலாம் என்று நினைத்த ஒரு கும்பலும், திரையரங்கிற்குள் ஏதோ ஒரு அமானுஷ்ய சம்பவம் நடந்திருக்கிறது என்று ஊர் மக்களின் கருத்தை கேட்டு, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பதற்காக செல்லும் youtube கும்பலும் திரையரங்கிற்குள் நுழைகிறார்கள். திரையரங்க உரிமையாளரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர்களுக்கு டிக்கெட் கிழித்து கொடுத்து அனைத்து மேற்பார்வைகளையும் பார்க்கிறார். ஆனால் அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிகிறது அங்கு ஏதோ அமானுஷ்யமான விஷயம் நடக்கிறது என்று. அவர்களால் தியேட்டரை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது. இப்பொழுது அந்த இடத்திலிருந்து அவர்கள் தப்பித்தார்களா..? இல்லையா..? என்பது மீதிக்கதை.

ஆரம்பத்தில் வழக்கமான காட்சிகள் இருந்தாலும், திரையரங்கிற்குள் நுழைந்த உடன் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவும் குறிப்பாக இடைவேளை காட்சி நம்மை பரபரப்பில் உச்சத்திற்கு கொண்டு சென்று விடுகிறது.

இரண்டாவது பாதியில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டின் நடிப்போ அசத்தல். இதற்காக ஆளவந்தான் மொட்டை கமல்ஹாசன் கேரக்டரை நன்றாக உள்வாங்கி இருக்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு சைக்கோ கில்லருக்கு உண்டான அனைத்து உடல் மொழிகளையும் ஒருசேர கொண்டிருக்கிறார். படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் தாங்கள் புதுமுகம் என்ற சுவடு தெரியாமல் தங்களுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் டப்பிங் இல் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு படத்திற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து இசையமைப்பாளரான சரண்குமார் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். ஒரு படத்தின் நிழல் காட்சிகள் என்ன..? நிஜ காட்சிகள் என்ன..? என்பதை வித்தியாசப்படுத்தும் வகையில் காட்சிகளை படம் பிடித்தது ஒளிப்பதிவாளர் சாஸ்தி பிரனேஷின் அசாத்திய திறமை.

வழக்கமான சைக்கோ திரில்லர் போன்ற பாணியில் இல்லாமல், Hollywood ல் மிகவும் பிரபலமான The Shining படத்தை Reference ஆக வைத்து தனது எடிட்டிங் பணிகளை நேர்த்தியாக செய்திருக்கிறார். எடிட்டர் குரு பிரதீப்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும், ஒரு கட்டத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை ஒரே இடத்தில் தேங்கி சுற்றிக் கொண்டே இருப்பதுதான் இதன் மிகப்பெரிய குறை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நாகேஷ் திரையரங்கம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று திரையரங்கம் சார்ந்து படங்களைப் போன்ற சாயல் இல்லாமல் இருந்திட வேண்டும் என்பதற்காக இயக்குனர் ஸ்ரீ டி அரவிந்த்ராஜ் மிகவும் மெனக்கிட்டிருக்கிறார். ஆனாலும் படத்தில் திரைக்கதையின் வேகத்தை இன்னும் துரிதப்படுத்தி இருந்தால் இது திரில்லர் படமாக வந்திருக்கும் என்பது அப்பழுக்கற்ற உண்மை…

Facebook Comments

Related Articles

Back to top button