
இயக்கம்: இசக்கி கார்வண்ணன்
நடிகர்கள்: விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகுமார், கூல் சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், வீரசமர், ஆறுபாலா
ஒளிப்பதிவு: சுகுமார்
இசை: தீபன் சக்ரவர்த்தி
தயாரிப்பு: லக்ஷ்மி கிரியேஷன்ஸ்
கதைப்படி,
திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் என்ற கிராமம். முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதி., நாளடைவில், கனிசமான மக்கள் அருகில் உள்ள யோக்கோபுரம் என்ற கிறிஸ்தவ கிராமத்திற்கு குடியேறுகின்றனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக மதமும் மாறிவிடுகிறார்கள்.
அப்படியாக சிறு வயதிலேயே அங்கு குடியேறி சென்றவர் தான் நாயகி சாயா தேவி. கிறிஸ்தவராக மாறினாலும், தனது நினைப்பு முழுவதையும் சுப்ரமணியபுரம் மீது தான் வைத்திருக்கிறார் சாயா தேவி. காரணம், தான் காதலிக்கும் காதலனான விமல், அக்கிராமத்தில் இருக்கிறார் என்பதால்.
தொடர்ந்து இரண்டு கிராமத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. வழக்கை விசாரிக்க காவல் அதிகாரி இசக்கி கார்வண்ணன் அங்கு வருகிறார்.
இறுதியில், யார் இந்த கொலைகளை செய்தது.? விமல் – சாயா தேவி இருவருக்கும் என்ன நடந்தது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் விமர்சனத்திற்கு சென்று விடலாம்…
இந்து மதத்தின் மீது வைத்திருக்கும் விசுவாசத்தினை காட்டுவதற்காக கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மதத்தை இழிவு படுத்தியிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். கிறிஸ்தவ மதத்தினை வில்லனாக சித்தரித்ததையும், முஸ்லீம்கள் தொப்பி அணிந்து கோவில் முன் சாமி ஆடுவதையும், கிறிஸ்தவ பாதிரியாரை காவி வேஷ்டி கட்டிக் கொண்டு வருவதுமாய் என பல காட்சிகளை வன்முறையின் உச்சக்கட்டமாகவே தெரிகிறது.
நாயகி தன் பெயரை பாத்திமா என்று அழைக்க விருப்பமில்லை என்று கூறிய பிறகும் கோவிலுக்கு எதற்காக பரமசிவன் பாத்திமா என்ற பெயரை வைக்க வேண்டும்.? போலீஸ் அதிகாரியாக இசக்கி கார்வண்ணன் மற்றும் போலீஸ்காரர்களாக வரும் காதல் சுகுமார், ஆறுபாலா போன்ற நடிகர்கள் அனைவருமே இயல்பை விட நடிப்பை சற்று மீட்டர் அதிகமாகவே கொடுத்திருக்கின்றனர். பாதிரியாராக வரும் எம் எஸ் பாஸ்கரை காமெடியாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.

இந்து மதத்தின் பெருமையையும் வரலாறையும் போற்ற ஆயிரமாயிரம் கதைகள் புராணங்களில் கொட்டிக் கிடக்கும் போது, அதை விடுத்து மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி அதில் குளிர் காய நினைப்பதென்பது என்ன மாதிரியான மனநிலை என்று புரியவில்லை.?
கடந்த சில வருடங்களாக நல்ல சினிமாவை நல்லதொரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விமல் எதற்காக இப்படியொரு கதையில் நடித்தார் என்று தெரியவில்லை. கன்னிமாடம் மாதிரியான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்த நடிகை சாயாதேவி எதற்காக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.?
முஸ்லீம் மதத்தினைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் இப்படத்தின் கதைக்கு எந்த வகையிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத போது, அம்மதத்தினை எதற்காக இக்கதைக்குள் கொண்டு வர வேண்டும்.?
இப்படியாக பல கேள்விக்கனைகளை இப்படத்தின் மீது தொடுத்துக் கொண்டே இருக்கலாம்… இருந்தாலும் இதோடு விமர்சனத்தை நிறுத்திக் கொண்டு
பரமசிவன் பாத்திமா – சர்ச்சைக்காக மட்டுமே…





