
பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்களின் இயக்கத்தில் குங்குமராஜ்,வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ்வைத்யா, செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா உள்ளிட்ட நடிகர், நடிகைகளின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ரயில்”.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் எஸ் ஜே ஜனனி.
படத்தொகுப்பினர் நாகூரான் இராமச்சந்திரன் கவனித்திருக்கிறார். தயாரித்திருக்கிறார் வேடியப்பன்.
ஒரு கிராமத்தை மையப்படுத்தி கதை நகர்கிறது. நாயகன் குங்குமராஜ், கைத்தொழில் இருந்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் மது குடித்து தனது வாழ்க்கையை வீணடித்து வருகிறார். இவருக்கு மனைவியாக வருகிறார் வைரமாலா.
திருமணமாகி வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை இல்லாதது இவர்களுக்குள் கவலையை உண்டு பண்ணுகிறது.
இவர்களின் வீட்டருகே வட மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் மெஹ்ரூ என்ற நபர் தங்கியிருக்கிறார். அக்கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்து வரும் பர்வேஸை கண்டு, வெறுப்படைகிறார் குங்குமராஜ்.
வட நாட்டில் இருந்து இங்கு வந்து இவர்கள் வேலை செய்வதால் தான் தனக்கு வேலை இல்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார் குங்குமராஜ்.
ஒருமுறை கணவன் – மனைவிக்கிடையே பிரச்சனை வர, அதை தடுக்க முயல்கிறார் பர்வேஸ். அப்போது குங்குமராஜுக்கும் பர்வேஸுக்கும் இடையே முட்டிக் கொள்கிறது.
இதனால், பர்வேஸை தீர்த்துகட்ட முடிவு செய்கிறார் குங்குமராஜ். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனை சரியாக தேர்வு செய்ததற்காகவே இயக்குனரை பெரிதாக பாராட்ட வேண்டும். ஒரு கிராமத்தில் எப்படியான மனநிலையில், எப்படியான வாழ்வியலை ஒரு மனிதன் வாழ்வான் என்பதை கண்முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார் நாயகன் குங்குமராஜ்.
குங்குமராஜின் மனைவியாக வரும் வைரமாலா, நிஜ கிராமத்து கதாபாத்திரமாக மாறி, தனது கேரக்டரை நிவர்த்தி செய்து நடித்திருக்கிறார். பர்வேஸை நினைத்து அழும் காட்சிகளில் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டார்.
வடக்கனாக நடித்த பர்வேஸும் தனது கேரக்டரை அளவாக கொடுத்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், குங்குமராஜின் நண்பராக வந்தவர், பர்வேஸின் மகளாக நடித்தவர், அவரது மனைவியாக நடித்தவர், பர்வேஸின் தந்தை மற்றும் தாய் என படத்தில் நடித்த இவர்களும் அக்கதாபாத்திரத்தின் வலுவை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
வைரமாலாவின் தந்தையாக நடித்தவரும் மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
வடக்கிருந்து வருபவர்களால் தான் நமது தொழில் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற எண்ணத்தில் இருக்கும் பலரும் இப்படத்தினை நிச்சயம் பார்க்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் இப்படத்தினை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
சின்ன சின்ன இடங்களிலும் படத்தின் உயிரோட்டத்தை கொடுத்து நம்மை கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு பல இடங்களில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரயில் (-) பாதையில் பாடம்…