
எழுத்து & இயக்கம்: ரமேஷ் பாரதி
நடிகர்கள்: ரஜினி கிஷன், திவிவிகா, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி
தயாரிப்பு: C.S. Padamchand, C. Ariyant Raaj & Rajini Kiishen
தயாரிப்பு நிறுவனம்: Mishri Enterprises
இசை: M.S. Jones Rupert
ஒளிப்பதிவு: என் எஸ் சதீஷ் குமார்
படத்தொகுப்பு: ஆர் கே வினோத் கண்ணா.
கதைப்படி,
ரஜினி ஆடியோ செட் ஒன்றை நடத்தி வருகிறார் கதையின் நாயகனான ரஜினி கிஷன். இவருக்கு ஞாபக மறதி இருப்பதால், அவ்வப்போது பழசை மறந்து விடுகிறார். இவரும் திவிவிகாவும் காதலர்கள். அன்று இரவு இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஓடிச் செல்ல திட்டமிடுகிறார்கள்.
ஆனால், ரஜினி கிஷனின் விளையாட்டுத்தனத்தால் இந்த விஷயம் ஊருக்கே தெரிந்துவிடுகிறது. ஊரே இருவரையும் விரட்ட, அந்த சமயத்தில் முனிஷ்காந்த் காரில் வருகிறார். இருவரும் அவரது காரில் ஏறி ஊரை விட்டு தப்பி விடுகின்றனர்.
ஒரு மந்திரியின் ராசியான காரை திருடி வந்திருக்கிறார் முனிஷ்காந்த் என்பது பின்பு தான் தெரிய வருகிறது. ((முனிஷ்காந்த் யார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.))
அதுமட்டுமல்லாமல், திருடனாக வரும் கல்கியும் இவர்களோடு அந்த காரில் ஏறிக் கொள்கிறார். காரை ஏற்காடு கொண்டு சென்று விடுகிறார் முனிஷ்காந்த்.
நாயகி திவிவிகாவின் முறைமாமனாக வரும் கூல் சுரேஷ் அங்கிருக்கிறார். திவிவிகாவை கண்டதும் அவரை பிடிக்க அவர்களை துரத்துகிறார். இந்த சமயத்தில், கல்கி திருடி வந்த தாலியைக் கொண்டு திவிவிகாவின் கழுத்தில் கட்டி திவிவிகாவை தனது மனைவியாக்கிக் கொள்கிறார் ரஜினி கிஷன்.

அந்த தாலிக்கு சொந்தக்காரி என்று அமானுஷ்யம் ஒன்று திவிவிகாவின் உடம்பிற்குள் ஏறிவிடுகிறது. அதன்பிறகு இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
சிரிப்பு என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர். எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல் 2 மணி நேரம் குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்றால் இந்த ரஜினி கேங்கை நிச்சயம் குடும்பத்தோடு பார்த்துவிட்டு வரலாம்.
எந்தவொரு ஆபாச காட்சிகளும் இல்லாமல் அனைத்து நடிகர்களிடம் இருந்தும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் பாரதி. அதிலும் குறிப்பாக, கூல் சுரேஷ், முனிஷ்காந்த் மற்றும் கல்கி இவர்களை படத்தில் சரியாக பயன்படுத்தியது இயக்குனரின் திறமை தான்.

இரண்டாம் பாதியில் எண்ட்ரீ கொடுத்து, அனைவரையும் கண்கலங்க வைக்கும் அளவிற்கு சிரிப்பலைகளை திரையரங்கில் கொடுத்ததற்கு காரணமாக இருந்தவர் மொட்டை ராஜேந்திரன் தான். அவரின் இசையை வைத்து பேயை விரட்டும் காட்சி அல்டிமேட் தான்.
கதையின் நாயகனான ரஜினி கிஷன், அப்பாவித்தனமான நடிப்பை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். திவிவிகாவின் நடிப்பும் அழகு தான்.
பர்ஸ்ட் நைட் பாடலில் திவிவிகான் அழகை ஒரு அடி தூக்கி நிறுத்திவிட்டது.
பாடல்கள் நன்றாகவே இருந்தது. பின்னணி இசையும் அளவாக இருந்தது. ஒளிப்பதிவு கச்சிதம்.,
ரஜினி கேங் – காமெடி கலாட்டா தான்..





