
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தணு நடிக்க உருவாகி வருகிறது ‘ராவண கோட்டம்’. இப்படத்தின் நாயகியாக கயல் ஆனந்தி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது குறித்து ஆனந்தி கூறும் போது,
“நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், என்னை போன்ற ஒரு கலைஞரை சினிமாவில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கும். எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. “ராவண கோட்டம்” அந்த மாதிரியான ஒரு திரைப்படம்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களை கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்கு பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். எந்தவொரு இயக்குனரும் புகழ் வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு படம் முடிந்த உடனே அடுத்த படத்தை துவங்க நினைப்பார்கள்.
ஆனால் அவர் அத்தகைய நடைமுறையிலிருந்து விலகி நிற்பவர். அவரது கடின உழைப்புக்கு ராவண கோட்டம் பரிசாக இருக்கும் என நம்புகிறேன். சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை முதன்முறையாக பார்த்த போது என்ன உணர்ந்தேனோ அதை நீங்களும் உணர்வீர்கள்.
அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞராகவும் இருக்கிறார். உண்மையில், ‘ஃபைட் சாங்’ என்ற கான்செப்டை அடிப்படையாக கொண்ட, ஒரு பொழுதுபோக்கு பாடலில் தான் முதலில் நடித்தேன். சாந்தனு ஒரு திறமையான நடனக் கலைஞராக இருந்தாலும் கூட, அவருடன் நடனம் ஆடியது ஒரு சிறந்த அனுபவம்” என்றார்.





