
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க ‘மாநாடு’ என்ற படம் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இப்படம் ட்ராப் செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இது சிம்பு ரசிகர்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் போது, ‘ மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.
தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி… துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.
அதனால் சிம்பு “நடிக்க இருந்த” மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. மேலும், ”இப்படம் மிகுந்த மிகுந்த காலம் தள்ளிச் செல்கிறது, இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம். பேசாமல் இப்படத்தை இதிலே ட்ராப் செய்து விடலாம்” என்று சிம்பு தான் என்னிடம் கூறினார். நானும் வேறு வழியில்லாமல் படத்தை ட்ராப் செய்கிறேன்.
வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் வேறு ஒரு நடிகர் நடிக்க புதிய பரிமாணத்தோடு விரைவில் தொடங்கும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!” என்று கூறினார்.