Spotlightசினிமா

ரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு!

பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆவதால், தங்கள் படங்களை வெளியிட முடியாமல் தவித்து வரும் சிறு பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், ரிலீஸில் ஒழுங்குமுறையை வகுக்கக் கோரி, நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலை தற்போது அதிகரித்துள்ளது. பெரிய ஹீரோ படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படியே சில காட்சிகளுக்கு மட்டும் தியேட்டர் கிடைத்தாலும் ரசிகர்கள் வருவதில்லை. படம் நன்றாக இருந்தாலும் கூட சின்ன பட்ஜெட் படங்களின் பக்கம் வர மறுக்கின்றனர்.

இதனால், பட ரிலீஸை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன், தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பெரிய ஹீரோ படங்களை, பண்டிகை காலங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும் மற்ற வாரங்களில் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை, நிறைவேற்றிய தயாரிப்பாளர்கள் சிலரே அதை மீறினர். இதனால், இந்த திட்டம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.

பிறகு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றபின், சிறு பட்ஜெட் படங்களின் ரிலீஸ் பிரச்னை மீண்டும் எழுந்தது. அப்போது அவர் தலைமையிலான டீம், ஒரு தீர்வை கொண்டு வந்தது. வாரத்தில் ஒரு பெரிய படம், 2 சின்ன படம், ஒரு டப்பிங் படம், பண்டிகை காலங்களில் பெரிய படங்கள் மட்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். பண்டிகை காலங்களில் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என்பதால் இந்த முடிவு என்று விளக்கம் சொல்லப்பட்டது.

இதை சிலர் விமர்சித்தாலும், இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்பட்டு வந்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்த இந்த ரிலீஸ் திட்டம், விஷாலின் பதவி காலம் முடிவடைந்ததும் சிக்கலானது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக சேகர் என்பவரை நியமித்திருக்கிறது வணிக வரித்துறை.

‘அவருக்கு சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இவ்வளவு அதிக முதலீடு செய்து நடக்கும் தொழிலை, எப்படி நடத்த வேண்டும் என்கிற விஷயம் அவருக்குத் தெரியவில்லை. படத்தில் விநியோகம், ரிலீஸ் விஷயங்கள் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவருக்குத் தெரியாததால், அவர் அமைதியாக இருக்கிறார். தயாரிப்பாளர்கள் பழைய ரிலீஸ் முறைகளை மறந்துவிட்டு அவர்கள் இஷ்டத்துக்கு ரிலீஸ் தேதியை அறிவிக்கிறார்கள். இதனால் சுமார் 200 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளன’’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர்.

அவரே மேலும் கூறும்போது, ‘ஒரு வருடத்தில் 52 வாரம் வருகிறது. வருடத்துக்கு சுமார் 210 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் 20 வாரம் பெரிய ஹீரோ படங்கள் (40 படங்கள்) ரிலீஸானால், மற்ற 32 வாரங்களில் 170 படங்களை எப்படி ரிலீஸ் செய்ய முடியும்? அதற்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? இதனால் பலகோடி ரூபாய், பெட்டிக்குள் முடங்கி வீணாகிறது என்பதுதான் உண்மை’ என்கிறார் அவர்.

சமீபத்தில் கூட தீபாவளிக்கு பெரிய ஹீரோ படங்கள் வெளியானதால், மற்ற வாரங்களில் சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யலாம் என நினைத்திருந்தனர். ஆனால், வரும் வாரங்களில் விஷாலின் ஆக்‌ஷன், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், விக்ரம் மகன் நடிக்கும் ஆதித்ய வர்மா (பெரிய படங்களுக்கு சமமாக இதை வெளியிட இருக்கின்றனர்), அடுத்த மாதம் தனுஷ் படம் என பொங்கல் வரை பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.

இதனால் படங்களை வெளியிட முடியாமல் இருக்கும் சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள், ரிலீஸை ஒழுங்கப்படுத்தக் கோரி நீதிமன்றத்துக்குச் செல்ல இருக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button